அனைத்துலக அளவில் பலதரப்பு ஏற்பாடு தொடர்ந்து ஏற்புடைய ஒன்றாக இருந்து வருகிறது என்றும் அது நிலைத்திருக்குமென வாளாவிருந்துவிட முடியாது என்றும் தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் தெரிவித்து இருக்கிறார்.
அந்த ஏற்பாட்டுக்குச் சில தரப்புகள் பின்னடைவை ஏற்படுத்தி வந்தாலும் அந்தப் பலதரப்பு ஏற்பாடுதான் பொருத்தமான ஒன்றாகத் தொடர்வதாக அவர் கூறினார்.
தி ஃபுல்லர்டன் ஹோட்டலில் நடந்த ‘எட்டாவது IISS ஃபுல்லர்ட்டன் கருத்தரங்கில்’ திரு ஹெங் உரையாற்றினார்.
ஒரு தரப்பு அல்லது இருதரப்பு வர்த்தக ஏற்பாடுகளின் மூலம் தங்களுடைய நலன்களை இன்னும் சிறப்பாகப் பேணலாம் என்று சில பெரிய பொருளியல் சக்திகள் கருதுவதாகத் தெரிகிறது.
அதேவேளையில், வர்த்தக தாராளமயத்தால் ஏற்ற இறக்கமான விளைவுகள் ஏற்பட்டு இருப்பதன் காரணமாக சில தரப்புகளிடையே தாராள வர்த்தகம் நியாயமற்ற ஏற்பாடு என்ற ஓர் எண்ணம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்றார் அமைச்சர்.
அனைத்துலக உத்திபூர்வ ஆய்வுக் கழகம் அந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது.
பலதரப்பு வர்த்தக ஏற்பாட்டை மேம்படுத்திக்கொண்டு செல்ல வேண்டுமானால் அதற்கான விதிமுறைகளும் அமைப்பு முறைகளும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று திரு ஹெங் வலியுறுத்தினார்.
பலதரப்பு சந்திப்புக் கூட்டங்கள் மூலம் ஏற்படக்கூடிய நன்மைகளைச் சிறந்த முறையில் வெளிப்படுத்தி பலதரப்பு ஏற்பாட்டிற்குப் பெரிய அளவிலான ஆதரவைத் தலைவர்கள் திரட்ட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் ஜூன் மாதம் நடைபெறும் ஷங்ரிலா கூட்டத்துக்கு முன்னதாக அனைத்துலகப் பேராளர்கள் தங்களுடைய கருத்துகளையும் கண்ணோட்டங்களையும் பகிர்ந்துகொள்வார்கள்.
இந்தக் கருத்தரங்கம் இன்றுடன் முடிவடைகிறது.
பல தரப்பு ஏற்பாடு என்பது அனைத்துலக உறவுகளில் ஒரு கோட்பாடாக இருந்து வருகிறது என்று குறிப்பிட்ட திரு ஹெங், அந்த ஏற்பாட்டின்படி மூன்று அல்லது அதற்கும் அதிக நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு பொதுவான இலக்கை நிறைவேற்றுகின்றன என்று வர்ணித்தார்.
அனைத்துலக அமைப்பு முறைகளில் பலதரப்பு ஏற்பாடு என்பது மிக முக்கிய அம்சமாக இருக்கிறது என்றும் அதேவேளையில், அந்த யோசனைக்கும் நடைமுறைக்கும் எதிரான போக்கு அதிகரித்து வருகிறது என்றும் திரு ஹெங் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு ரீதியில் பார்க்கையில் பலதரப்பு ஏற்பாடுகள் தங்களுடைய செல்வாக்கை மேம்படுத்துவதற்குப் பதில் குறைக்கின்றன என்று பெரிய வல்லரசு நாடுகளிடையே கருத்து நிலவுவதாகவும் ஆனால் நாடுகளை ஒன்றிணைத்து மிரட்டல்களை வெற்றிகரமாகச் சமாளிக்க முக்கியமான அம்சமாக அந்த ஏற்பாடு திகழ்கிறது என்றும் திரு ஹெங் தெரிவித்துள்ளார்.