ஆசியாவின் ஆகப் பெரிய சிங்கப்பூர் விமானக் கண்காட்சி சாங்கி மாநாட்டு மையத்தில் அடுத்த மாதம் 11 முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும்.
ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் அந்தக் கண்காட்சியில் மொத்தம் 50 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கெடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 150 நாடுகளைச் சேர்ந்த 55,000 வர்த்தகப் பிரமுகர்கள் கண்காட்சிக்கு வருவார்கள் என்றும் கணக்கிடப்பட்டு உள்ளது.
‘எக்ஸ்பிரியா ஈவெண்ட்ஸ்’ என்ற இந்தக் கண்காட்சி ஏற்பாட்டு நிறுவனம், உலகிலேயே தலைசிறந்த 100 ஆகாய மற்றும் தற்காப்பு நிறுவனங்களில் 65க்கும் அதிக நிறுவனங்கள் சிங்கப்பூர் கண்காட்சியில் கலந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கிறது.
கண்காட்சி பிப்ரவரி 11 முதல் 14 வரை வர்த்தகப் பேராளர்களுக்குத் திறந்திருக்கும். அப்போது தொழில்துறைக் கருத்தரங்குகளும் நடக்கும். அதோடு சிங்கப்பூர் விமானக் கண்காட்சி விமான தொழில்துறை தலைமைத்துவ உச்சநிலை மாநாடும் நடக்கும்.
பிறகு பிப்ரவரி 15 மற்றும் 16ஆம் தேதிகளில் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
என்றாலும் கண்காட்சியில் என்னென்ன விமானங்கள் பார்வைக்கு இடம்பெறும் என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.