சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் வாக்காளர்களைக் கவர்வதற்கான தனது கட்சியின் திட்டத்தை பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் வெளியிட்டார்.
தரமிக்க வேட்பாளர்களைக் கட்சி களமிறக்கும் என்றும் அவர்கள் நாடாளுமன்றத்தில் கடுமையான கேள்விகளைக் கேட்பார்கள் என்றும் தங்களுடைய சொந்த நகர மன்றங்களை அவர்கள் நல்ல முறையில் நிர்வகிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். பாட்டாளிக் கட்சியின் வருடாந்திர உறுப்பினர்கள் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதில் உரையாற்றிய பிரித்தம் சிங், வரும் தேர்தலுக்கு ஆயத்தமாகும்படி கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக்கெண்டார்.
பாட்டாளிக் கட்சிக்கு சிங்கப்பூரர்கள் ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி விளக்கிய அவர், அந்தக் கட்சிக்கு வாக்களித்தால் நாடாளுமன்றம் இப்போது இருப்பதைவிட இன்னும் சிறந்த சமநிலையைக் கொண்டிருக்கும் என்றார்.