வீட்டுக்கு வந்த விருந்தினர்களுடன் மாது ஒருவர் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அவர்கள் பயன்படுத்திய கண்ணாடி மேசை சுக்குநூறாக உடைந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) அன்று நடந்தது.
இதனால் சாப்பிட்டுக்கொண்டிருந்த அனைவருக்கும் காயங்கள் ஏற்பட்டதுடன் வீட்டு உரிமையாளரான ஸ்டெஃபனி சூவுக்கு கடுமையான தீப்புண் காயங்கள் ஏற்பட்டதாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
சிதறிய உணவுடன் தரையெங்கும் கண்ணாடிச் சில்லுகள் சிதறிக் கிடந்ததால் நகரக்கூட முடியாமல் அனைவரும் கொஞ்ச நேரம் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்ததாகவும் திருவாட்டி சூ அப்பதிவில் குறிப்பிட்டார்.
இங் டெங் ஃபொங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட திருவாட்டி சூ, தனது புதிய சமையல் சாதனங்கள் பெருமளவில் சேதமடைந்துவிட்டதாகவும் வீட்டுச் சுவர், தரை ஓடுகள், நாற்காலி ஆகியவற்றின் மீது ரத்தக்கறை படிந்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
வெப்ப அழுத்தத்தால் கண்ணாடி மேசைக்கு இவ்வாறு சேதம் ஏற்படும் சாத்தியம் உள்ளது என்றாலும் மருத்துவச் செலவு, பழுதுபார்க்கும் கட்டணம் ஆகியவற்றை மேசையை விற்ற கடை ஏற்கவேண்டும் என்று திருவாட்டி சூ சொன்னார்.
இதன் தொடர்பில் நீராவி உணவைச் சமைத்துச் சாப்பிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட சாதனம், அக்கண்ணாடி மேசை மீது நேரடியாக வைக்கப்பட்டிருக்கக்கூடாது என்றும் அவ்வளவு கண்ணாடி மேசை வடிவமைக்கப்பட்ட பயன்பாட்டுக்கு அப்பால் அந்த வீட்டில் பயன்படுத்தப்பட்டது என்றும் ‘கம்ஃபர்ட் டிசைன்’ நிறுவனப் பேச்சாளர் ஸ்டோம்ப்பிடம் தெரிவித்தார்.
மேலும், மேசையைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட கண்ணாடி மற்ற சாதாரண கண்ணாடிகளை வலுவானது என்றும் அது உடைந்தால் சில்லுகளாகும்; ஆனால், கூரான துண்டுகளாகாது என்று குறிப்பிட்ட அந்த நிறுவனப் பேச்சாளர், பாதிக்கப்பட்டோருக்கு ஏற்பட்ட காயங்கள் முள்கரண்டி போன்ற சாப்பிடப் பயன்படுத்திய கருவிகள் மூலம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
#தமிழ்முரசு #கண்ணாடிமேசை #ஸ்டீம்போட்