போதைப்பொருள் தொடர்பான குற்றங்களால் நாட்டுக்கு $1.2 பில்லியனுக்கு மேலான இழப்பு 2015ஆம் ஆண்டில் ஏற்பட்டதாக ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
போதைப்பொருள் குற்றங்களால் ஏற்படும் இழப்பைப் பணமாகக் கணக்கிடும் முயற்சியில் ஈடுபட்ட பொருளியல் நிபுணர்கள், நாட்டுக்கு $1.23 பில்லியன் இழப்பு நேர்ந்ததைக் கண்டறிந்தனர்.
மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் சிங்கப்பூரில் போதைப்பொருள் புழக்கம் குறைவாக இருந்தாலும் இந்த அளவுக்குப் பண இழப்பு ஏற்பட்டுள்ளதாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக அமைப்புகள் செய்த செலவுகளையும் போதைப்பொருள் புழங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள், போதைப்பொருள் புழங்கிகள் மாண்ட விகிதம், உற்பத்தித் திறனில் ஏற்பட்ட நஷ்டம் போன்ற சூழல்களையும் கணக்கிட்டதில் இந்தத் தொகை கணக்கிடப்பட்டது.
இதன் தொடர்பில் மனிதவள அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ வாழ்நாள் கற்றல் கழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கருத்தரங்கில் பேசினார். உள்துறை அமைச்சு ஏற்பாடு செய்த இக்கருத்தரங்கில் பல்வேறு அரசு அமைப்பினர், சமூகப் பங்காளிகள், கல்வியாளர்கள் ஆகியோர் பங்கேற்றதுடன் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான ஆய்வு முடிவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.
போதைப்பொருள் புழக்கம் தொடர்பான மெத்தன போக்கால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் திருமதி டியோ பேசினார்.
கஞ்சா தீங்கு விளைவிக்கக்கூடியது அல்ல என்ற கூற்று, தவறான தகவல் என்று உதாரணங்களுடன் சுட்டிக்காட்டிய அமைச்சர் டியோ, இதுபோன்ற தவறான தகவல்களுக்கு எதிராக நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தினார்.
இல்லையேல் போதைப்பொருள் புழக்கம் தொடர்பில் பலரும் அலட்சிய மனப்போக்கைப் பெற்றுவிடுவர் என்றும் அவர் சுட்டினார்.
கைதான போதைப்பொருள் புழங்கிகளின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது 1990களில் ஒவ்வோர் ஆண்டும் 6,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இப்போது அந்த எண்ணிக்கை குறைந்து ஒவ்வோர் ஆண்டிலும் கிட்டத்தட்ட 3,000 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.