இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிடோக் நார்த் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கின் குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தை, தற்போது மருத்துவமனையில் சீரான உடல்நிலையில் உள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
ரத்தக் கறை படிந்த நெகிழிப் பைக்குள் வைத்துக் கட்டப்பட்ட குழந்தையை, இம்மாதம் 7ஆம் தேதியன்று துப்புரவாளர் ஒருவர் கண்டுபிடித்தார். புளோக் 534, பிடோக் நார்த் ஸ்திரீட் 3ல் இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டது.
குழந்தையைக் கொண்டிருந்த பை, குப்பைத்தொட்டியில் இருந்த பல குப்பைப் பைகளுக்கு மத்தியில் கிடந்ததாகக் கூறப்பட்டது.
குழந்தையைக் கண்டெடுத்தபோது அதன் உடலில் எந்தக் காயமும் இல்லை.
கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தை குறித்து போலிசின் விசாரணை தொடர்கிறது.
இதற்கிடையே கடந்த பத்தாண்டுகளில் பதின்ம வயது பெண் களுக்குக் குழந்தை பிறக்கும் விகிதம் குறைந்து வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்துள்ளது.