பத்து தொடக்கப் பள்ளிகளிலும் 16 பாலர் பள்ளிகளிலும் உள்ள விளையாட்டுத் திடல்களின் அளவு 2024ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கப்பட உள்ளன. அதிகமான பிள்ளைகள் துடிப்புடன் ஓடியாடுவதை ஊக்குவிப்பதற்கான இந் நடவடிக்கைக்குத் திட்டமிடப்பட்டு உள்ளதாக கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்போது 120 சதுர மீட்டராக உள்ள விளையாட்டுத் திடல்களின் பரப்பளவு 240 சதுர மீட்டராக அதிகரிக்கப்படும். இதற்கான வேலைகள் இவ்வாண்டில் தொடங்கி கட்டம் கட்டமாக நடைபெறும். கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளுக்கான வெளிப்புற விளையாட்டுத் திடல்களும் 160 சதுர மீட்டராக விரிவாக்கம் காண உள்ளன.
மேலும், தொடக்கப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் வெளிப்புற தரைப்பகுதிகளில் ‘அக்ரிலிக்’ பூச்சு மேற்கொள்ளப்படும். பாதுகாப்பான முறையில் விளையாடவும் உடல்ரீதியான நடவடிக்கைகளுக்கும் ஏற்ற வகையில் இதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
இவ்வாண்டின் தேசிய பள்ளி விளையாட்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றியபோது அமைச்சர் ஓங் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் உள்ள ஓசிபிசி திறந்தவெளி அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
40 தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் கூடைப்பந்து மைதானங்களுக்குக் கூரை அமைக்கப்படும் என்பதும் அவரது அறிவிப்பில் அடங்கும். கூரையுடன் கூடிய குறைந்தபட்சம் மூன்று அரங்குகளையாவது எல்லாப் பள்ளிகளும் பெற்றிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதி இந்தப் புதிய வசதிகள். பல நோக்கு அறை, உள்ளரங்க விளையாட்டுத் திடல், கூரையுடன் கூடிய கூடைப்பந்து மைதானம் ஆகியன பள்ளிகள் பெற்றிருக்க வேண்டிய வசதி களில் அடங்கும். தேசிய பள்ளி விளையாட்டுகளில் அங்கம் வகிக்கும் திடல், தட மாணவர்களுக்கு அதிக விளையாட்டு வாய்ப்புகளை வழங்குவதற்கான தனது முயற்சிகளை விரிவு படுத்தவும் அமைச்சு திட்டமிடுகிறது.பல்வேறு தொடக்கப் பள்ளி களுடன் இணைந்து முன்னோடி ஆய்வு ஒன்றை அமைச்சு தொடங்க உள்ளது.
மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுபடும் பொருட்டு தேர்ந்தெடுப்பு முறைகளில் மாற்றம் செய்வதை நோக்கமாகக் கொண்டது இந்த ஆய்வு. பள்ளிக் குழந்தைகள் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க அமைச்சு மேற்கொண்டிருக்கும் ஆக அண்மைய முயற்சி இது.