தாதிமை இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளியை மானபங்கம் செய்த குற்றத்துக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஆடவர் தீர்ப்பை எதிர்த்து மேல்மூறையீடு செய்த பிறகு 2018ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தாதிமை ஊழியரான அந்த 35 வயது ஆடவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், தற்போது அவருக்கு மீண்டும் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
அந்த ஆடவருக்கு 16 மாதச் சிறை, மூன்று பிரம்படிகள் விதிக்கப்பட்டன.
55 வயது நோயாளியை அந்த ஆடவர் மானபங்கம் செய்ததைப் பார்த்ததாக தாதிமை இல்லத்தின் தாதி ஒருவர் அளித்த சாட்சியத்துக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் முக்கியத்துவம் கொடுத்தது.
பாதிக்கப்பட்ட நோயாளிக்கு மனநலம் சரியில்லாத காரணத்தால் அவரால் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க முடியவில்லை.
பாதிக்கப்பட்டவரின் சாட்சியத்துடன் ஒப்பிடும்போது சாட்சியின் சாட்சியம் பிழையுள்ளதாக இருக்கும் சாத்தியம் இருப்பதாகக் கூறி 2018ஆம் ஆண்டில் அந்த ஆடவரை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
ஆனால் குற்றத்தால் பாதிக்கப்பட்டவரின் சாட்சியத்தைப் போல சம்பவத்தை நேரில் கண்டவரின் சாட்சியமும் நம்பகமானது என்று நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணைக்குத் தலைமைதாங்கிய மூன்று நீதிபதிகளும் தெரிவித்தனர்.
“பாதிக்கப்பட்டவரின் சாட்சியமும் சாட்சியின் சாட்சியமும் வேறுபடுவதாக நீதிபதி தெரிவித்த கருத்து பிழையானது என்று நாங்கள் கருதுகிறோம்,” என்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தெரிவித்தார்.
மானபங்கம் செய்யப்பட்ட நோயாளிக்குப் பலமுறை பக்கவாதம் ஏற்பட்டுள்ளதால் அவர் பெரும்பாலான நேரங்களில் குழம்பிய நிலையில் இருப்பதாகவும் நடமாடுவதில் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. சாட்சியம் அளித்த தாதி 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதியன்று தாதிமை இல்லத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அந்த நோயாளியை அந்த ஆடவர் மானபங்கம் செய்துகொண்டிருந்ததைப் பார்த்தார்.
சில வினாடிகள் கழித்து அவர் அந்த அறையைவிட்டு வெளியேறி ஆண் தாதியிடம் நடந்ததைக் கூறினார். அந்த ஆண் தாதி அறைக்குள் சென்றதபோது அந்த ஆடவர் தமது கைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அந்தப் பெண் தாதி பார்த்ததைத் தவறாகப் புரிந்துகொண்டதாக அவர் கூறினார். இன்னொரு நோயாளியின் தொலைக்காட்சியைப் பழுதுபார்க்க தாம் அங்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.
ஆனால் சம்பவம் நடந்தபோது அந்தத் தாதி மானபங்கம் செய்த அந்த ஆடவருக்கு மிக அருகில் இருந்ததாகவும் அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது என்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் முடிவெடுத்தது.