சிங்கப்பூருக்கும் சீன நகரான வூஹானுக்கும் இடையிலான எட்டுப் பயணங்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்கூட் ரத்து செய்துள்ளது. வூஹான் வைரஸ் கிருமி பரவல் குறித்த அச்சத்தால் சீன நகரில் பொது போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டதை அடுத்து இன்றிலிருந்து வரும் திங்கட்கிழமை காலை வரை சிங்கப்பூரிலிருந்து வூஹானுக்குச் செல்லவிருந்த ஸ்கூட் விமானங்களின் சேவை நிறுத்தப்படும். ரத்து செய்யப்பட்ட சேவைகளுக்கான பயணச் சீட்டுகளை ஏற்கனவே பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், இழப்புத் தொகைக்காக மின்னஞ்சல்கள் மூலம் ஸ்கூட் நிறுவனம் விண்ணப்பிக்கலாம் என்று அந்நிறுவனம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
‘நிமோனியா’ எனும் நுரையீரல் அழற்சியை ஏற்படுத்தும் வூஹான் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதன்கிழமையன்று 571க்கு உயர்ந்ததாகவும் மரண எண்ணிக்கை 17க்கு உயர்ந்ததாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீன அதிகாரிகள் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அந்த நகரைவிட்டுச் செல்லும் எல்லா விமானங்கள், ரயில், பேருந்து, படகு ஆகியவற்றை ரத்து செய்யவுள்ளதாக அறிவித்தனர்.