இக்கியா அறைகலன் கடையிலிருந்து வாங்கப்பட்ட அலமாறியின் கண்ணாடிப் பகுதி திடீரென நொறுங்கியதற்காக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்தக் கடை மன்னிப்பு கேட்டுள்ளது. ஈராண்டுகளுக்கு முன்பு அந்த அலமாறியை வாங்கியதாக ‘ஸ்டாம்ப்’ தளத்திடம் குறிப்பிட்ட அந்த பெண், ஜனவரி 14ஆம் தேதியன்று பகல் சுமார் 2.45 மணிக்கு வீடு திரும்பியதும் கண்ணாடி உடையும் சத்தம் பலமாக கேட்டதாகக் குறிப்பிட்டார்.
“முதலில் மின்னேற்றி வெடித்திருக்கும் அல்லது கனமான பொருள் ஏதேனும் விழுந்திருக்கும் என நினைத்தேன். பின் அலமாறியின் கண்ணாடிப் பகுதி நொறுங்கியிருந்ததைக் கண்டு திகைத்தேன்,” என்றார் அவர்.
அந்த பெண் உடனே ‘இக்கியா’வைத் தொடர்பு கொண்டார். 20 நிமிடங்கள் கழித்து எவரும் அந்த அழைப்பிற்குப் பதிலளிக்கவில்லை. ‘ஃபேஸ்புக்’ தளத்தில் ‘இக்கியா’வுடன் தொடர்பு கொள்ள முயன்று அதிலும் தோல்வியுற்றார். “எனது அலமாறியின் கண்ணாடிப் பகுதி முழுவதுமாக கீழே விழுந்துவிடுமோ என்ற பயத்தினால் நான் செருப்புகளை அணிந்துகொண்டே அலமாறியைச் சுற்றி செய்தித்தாட்களையும் வைத்தேன்,” என்றார் அந்த பெண்.
ஸ்டாம்ப் செய்தித் தளத்திற்குப் பதிலளித்த இக்கியாவின் வர்த்தகத் தொடர்புப் பிரிவு, அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகக் கூறினர். அத்துடன் பாதுகாப்பே தனது தலையாய அக்கறை என்றும் இக்கியா பொருட்கள் கடுமையான தரநிலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் இக்கியா கூறியுள்ளது.