உலகம் முழுவதிலும் உலகமயமாதலுக்கு அழுத்தம் அதிகரித்து வரும் வேளையில், சிங்கப்பூர் தொடர்ந்து மற்ற நாடுகளுடன் தொடர்ந்து அணுக்கமாக ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளியல் கருத்தரங்கில் தெரிவித்துள்ளார்.
“சிங்கப்பூரில் நாம் பலவற்றை செயல்படுத்தலாம். ஆனால் அவற்றை எளிதில் செய்துவிட முடியாது. அப்படி என்றால், நாம் நமது நிறுவனங்களை, நமது மக்களை, நமது கல்வி முறையை, நமது ஆற்றல்களை மேம்படுத்த வேண்டும்.
“அப்போதுதான் உயர் தரமுள்ள முதலீடுகளை, செயல்முறைகளை, ஆய்வு மேம்பாட்டு மையங்களை, உயர் திறனுள்ள மக்கள் வாழ, வேலை செய்ய விரும்பக்கூடிய இடத்துக்கான சுற்றுச்சூழலை உருவாக்க முடியும்,” என்றார்.
“பாதுகாப்பு, இடர்காப்பு, நம்பிக்கை, வாய்ப்புகள், துடிப்புத்தன்மை என அனைத்து அம்சங்களும் கொண்ட சுற்றுச்சூழல் அமைய வேண்டும்,” என்று திரு லீ சுமார் 30 நிமிடங்களுக்குக் கலந்துரையாடலில் பங்கேற்று பேசினார்.
கலந்துரையாடலை உலகப் பொருளியல் கருத்தரங்கின் தலைவர் திரு போர்ஜ் பிரண்டே வழிநடத்தினார்.
“இந்த அம்சங்கள் முதலீட்டாளர்களை, திறனாளர்களை ஈர்க்கவில்லை என்றால், நமது திட்டங்கள் தோற்றுப்போகும்.
“சிங்கப்பூரைப் பொறுத்தவரை, நாங்கள் தோல்வியடையக்கூடாது. காரணம் நாம் வெற்றி பெறுவதற்கு ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்கும்,” என்று பிரதமர் வலியுறுத்தினார்.
“நாங்கள் எங்கள் மக்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும். உலகில் நடைபெறும் நல்ல செயல்கள் சிங்கப்பூருக்கு மட்டுமல்லாது அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் நன்மை பயப்பதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
“அப்போதுதான் நாம் உருவாக்கும் வேலைகளை அவர்கள் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொள்வார்கள். அதன் மூலம் உலகளாவிய போட்டித்தன்மைக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்வார்கள்,” என்றார் திரு லீ.
“காலத்துக்குக் காலம் ஒரு தொழில்துறை சரிவு காணும்போது அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கு ஆதரவளிப்போம். அவர்களுக்கு வேறொரு தொழில்துறையில் வேலை தேடித் தருவோம்.
“அதன் மூலம் அவர்கள் சொந்தக் காலில் நிற்க போதிய உதவியை அளித்து அவர்களை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வோம்,” என்றும் பிரதமர் லீ தமது கலந்துரையாடலின்போது விவரித்தார்.