சீனாவிலும் வெளிநாடுகளிலும் விசித்திர ‘வைரஸ்’ தொடர்ந்து பரவி வருவதால் சிங்கப்பூரில் உள்ள பாலர் பள்ளிகள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாலர் பள்ளிகளிலும் மாணவர் பராமரிப்பு நிலையங்களிலும் குழந்தைகள் மற்றும் ஊழியர்களின் உடல் நலனை உறுதி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்த விவரங்களை பள்ளிகள் தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு உத்தர விட்டுள்ளது.
“குழந்தைகளும் சிறார்களும் தொற்றுநோய்களுக்கு எளிதில் ஆளாகலாம் என்பதால் பாலர் பள்ளிகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வூஹானுக்கு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது,” என்று அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
மசெக சமூக அறநிறுவனத்தின் ஸ்பார்க்கிள்டாட்ஸ், எடன் ஹவுஸ் போன்ற பாலர் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் வார இறுதியில் சீனப் புத்தாண்டு விடுமுறையில் மேற்கொள்ளப்படும் பயணங்களைப் பற்றி பெற்றோர்களும் ஊழியர்களும் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீனப் புத்தாண்டு விடுமுறையில் சீனாவுக்குச் சென்று திரும்பும் பயணிகளால் மேலும் கிருமி அதிவேகத்தில் பரவலாம் என்று அஞ்சப் படுகிறது.
இதன் காரணமாக பெற்றோர் மற்றும் ஊழியர்களின் வார இறுதி பயண விவரங்களைக் கேட்டு அமைச்சு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கடந்த 2003ல் சார்ஸ் நோய் ஏற்பட்டபோதே மாணவர், ஊழியர்களின் பாதுகாப்பையும் நலன்களையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்டதை நேற்று இரவு வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் கல்வி அமைச்சர் ஓங் யி காங் நினைவூட்டினார்.
“தேவை ஏற்பட்டால் அத்தகைய நடவடிக்கைள் மீண்டும் செயல் படுத்த தயாராக இருக்கிறோம்,” என்றார் திரு ஓங்.
குழந்தைகளின் உடல்நலன் பாதிக்கப்பட்டால் பெற்றோர் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும் என்று கூறிய அவர், பள்ளிக்குத் திரும்புவதற்கு முன்பு குழந்தைகள் முழுமையாக குணமடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நிமோனியா காய்ச்சல் பரவல் காரணமாக சீனாவுக்கான சுற்றுப் பயணங்கள் ரத்து செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திட்டமிட்டபடி சுற்றுப் பயணிகளை சீனாவுக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலா நிறுவனங்களும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளைப் புகுத்தி வருகின்றன.
உதாரணமாக டைனாஸ்டி டிராவல், தனது பயணிகளுக்கு முகக் கவசங்களை விநியோகித்து வருகிறது. கடலுணவு, ஈரச்சந்தைகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அது தமது பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் சுற்றுலா பயணிகளுக்கு சமைக்கப்படாத உணவுகளை வழங்குவதையும் அந்த நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இதற்கிடையே அடுத்த திங்கட்கிழமை வரை சிங்கப்பூருக்கும் வூஹானுக்கும் இடையிலான எட்டு விமான சேவைகளை ரத்து செய் வதாக நேற்று மலிவு கட்டண விமான நிறுவனமான ‘ஸ்கூட்’ அறிவித்தது. கிருமி பரவல் காரணமாக இந்த எட்டு சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் படுவதாக அதன் இணையப் பக்கத்தில் வெளியிட்ட தகவலில் ஸ்கூட் தெரிவித்தது.