இவ்வார இறுதியில் சீனப் புத்தாண்டைெயாட்டி சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் கடற்பாலத்தையும் துவாஸ் 2வது பாலத்தையும் ஏராளமானோர் கடந்து செல்வார்கள் என்பதால் நெரிசலை சமாளிக்க மலேசிய சோதனைச் சாவடிகளில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜோகூரில் உள்ள கடற்பாலத்திற்கான சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடியிலும் 2வது பாலத்திற்கான சுல்தான் அபு பக்கர் வளாகத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடியிலும் மக்கள் நெரிசலைச் சமாளிக்கவும் குடிநுழைவுச் சோதனைகளை சுமூகமாகக் கடந்து செல்லவும் பலதரப்பட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மலேசிய குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் கைருல் சைமி தாவுத் தெரிவித்தார்.
“இரண்டு சோதனைச் சாவடிகளிலும் ஜனவரி 23ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை மக்கள் கூட்டம் அதிகரிக்கலாம் என்பதால் பேருந்து, மோட்டார் சைக்கிள், கார் தடங்கள் உட்பட சேவை முகப்புகள் அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
“துவாஸ் 2வது பாலத்துக்கான சுல்தான் அபு பக்கர் வளாகத்தில் உள்ள சோதனைச் சாவடியில் 12 கூடுதல் முகப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்து மொத்தம் 36 முகப்புகள் அங்கு செயல்படும்,” என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் திரு கைருல் கூறினார்.
ஜோகூர் கடற்பாலத்துக்கான சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்தில் உள்ள சோதனைச் சாவடியில் கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள், உடற்குறையுள்ளோர் ஆகி யோருக்காக 3வது, 4வது முகப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதே போன்ற முகப்புகள் சுல்தான் அபு பக்கர் வளாகத்திலும் செயல்படும்.
இரு நுழைவு வாயில்களிலும் இயந்திரங்கள் சிறந்த முறையில் செயல்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இரு சோதனைச் சாவடிகளிலும் பணியாற்றும் அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறிய திரு கைருல், மற்ற பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகளும் இந்த இரு சோதனைச் சாவடிகளுக்கு அனுப்பப் பட்டுள்ளதாக கூறினார்.