மார்சிலிங்கில் மகளைக் கொலை செய்ய முயற்சி செய்த 63 ஆடவர் மீது இன்று (ஜனவரி 24) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
மலேசியரான ஷூ ஆ சான் தனது 41 வயது மகளான திருவாட்டி ஷூ சுவெட் லியனைத் தாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மார்சிலிங் லேன் பேருந்து நிறுத்தத்தில் இம்மாதம் 17ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் ஒரு கத்தியைக் கொண்டு மகளின் தோள்ப்பட்டை, மார்பு ஆகிய இடங்களில் குத்தியதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சம்பவம் நிகழ்ந்து சில நிமிடங்களில் போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. காயமடைந்த நிலையில் அந்தப் பெண் சம்பவ இடத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தப் பெண் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தின் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறை, உட்லண்ட்ஸ் போலிஸ் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு தந்தை ஷூவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அதிகாலை வேளையில் பலர் சத்தம் போட்டதைக் கேட்டதாக சம்பவ இடத்துக்கு அருகில் வசிப்போர் சீன நாளிதழான லியன்ஹ வான்பாவ்விடம் தெரிவித்தனர்.
காணொளித் தொடர்பு மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையான தந்தை ஷூ, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது உணர்ச்சி எதையும் வெளிப்படுத்தவில்லை.
மத்திய போலிஸ் பிரிவில் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஷூ, இம்மாதம் 31ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.
கொலை செய்ய முயற்சி செய்பவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.
அந்த முயற்சியில் தாக்கப்பட்டவர் காயமடைந்தால் தாக்கியவருக்கு ஆயுள்தண்டனை, பிரம்படிகள் விதிக்கப்படலாம். அல்லது 20 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி போன்றவை விதிக்கப்படலாம்.
ஷூ 50 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால் அவருக்கு பிரம்படிகள் விதிக்க இயலாது.
#தமிழ்முரசு #மலேசியர் #மகளைக்கொல்லமுயற்சிசெய்ததந்தை #மார்சிலிங்