இவ்வாண்டுக்கான தைப்பூசத் திருவிழா அடுத்த மாதம் 8ஆம் தேதி நடைபெறுகிறது.
தைப்பூச ஊர்வலம் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பிப்ரவரி 7ஆம் தேதி இரவு 11.30 மணி தொடங்குவதாக இந்து அறக்கட்டளை வாரியம் தனது இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலை விட்டு புறப்படும் பக்தர்கள் சுமார் நான்கு கிலோ மீட்டர் கடந்து தேங் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலை வந்தடைவார்கள்.
அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தின் கதவுகள் அன்று பின்னிரவு 12.01 மணிக்கு திறந்து பால்குடங்கள் மற்றும் காவடிகள் உள்ளே அனுமதிக்கப்படும்.
பிப்ரவரி 7ஆம் தேதி காலை 9 மணி முதல் 8ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை ரேஸ் கோர்ஸ் சாலை மூடப்பட்டிருக்கும்.
அலகு, ரதக் காவடிகளை எடுக்கவிருக்கும் பக்தர்கள் ரேஸ் கோர்ஸ் ரோடு வழியாக பெருமாள் கோயிலின் நுழைவாயில் இரண்டு வழியாக நுழைய வேண்டும்.
காவடி எடுக்கும் பக்தர்கள் ரேஸ் கோர்ஸ் சாலையில் 8ம் தேதி அதிகாலை 3 மணி முதல் தங்கள் காவடிகளை இறக்கலாம்.
பால்குடம், பால்காவடி, தொட்டில் காவடி ஆகியவைற்றை எடுக்கவிருக்கும் பக்தர்கள் முதலில் பெருமாள் ரோடு வழியாக ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திற்குள் நுழைய வேண்டும்.
நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை அதிக கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால் பால்குடம் எடுக்கும் பக்தர்கள் கூடுமானவரையில் அந்நேரத்தைத் தவிர்ப்பது நல்லது என்று வாரியம் தெரிவித்தது.
மேலும் கூட்ட நெரிசல் அதிகமாகும் நேரங்களில் பெருமாள் கோயிலில் இடப்பற்றாக்குறை ஏற்படலாம் என்பதால் பக்தர்கள் வீட்டிலேயே பாடல்குடங்களைத் தயார்செய்து வருமாறும் இந்து அறக்கட்டளை வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
தைப்பூச தினத்தன்று பெருமாள் கோயிலிலிருந்து மாலை 5 மணிக்குள் அனைத்து பால்குடங்களும் காவடிகளும் வெளியேற வேண்டும் என்றது வாரியம்.
ஊர்வலப் பாதையில் 41 இசை ஒலிபரப்பும் கூடங்கள் அமைக்கப்படும். இது கடந்த ஆண்டின் 35 கூடங்களையும் 2018ஆம் ஆண்டின் 20 கூடங்களைக் காட்டிலும் அதிகம்.
அத்துடன், இரண்டு உறுமி மேள இசைக்கூடங்கள் ஷார்ட் ஸ்ட்ரீட்டிலும் பிராஸ் பாசாவிலும் அமைக்கப்படும். மேலும் ஹேஸ்டிங்ஸ் ரோட்டில் நாதஸ்வரம், தவில் இசைக்கருவிகளுக்கான ஓர் இடமும் அமைக்கப்படும்.
காவடி எடுக்கும் பக்தர்களுடன் செல்லும் பதிவு செய்யப்பட்ட பஜனைக் குழுக்கள் கையில் எடுத்துச் செல்லக்கூடிய இசைக் கருவி களுடன் இந்திய பாரம்பரிய இசைக் கருவி ஒன்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
ஆயினும் மேற்கத்திய இசைக்கருவிகளையோ ஒலிப் பெருக்கியையோ பயன்படுத்தக்கூடாது என்று இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்தது.
தைப்பூசத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பற்றிய மேல் விவரங்களுக்கு www.thaipusam.sg என்ற இணையத்தளத்தை நாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
#தமிழ்முரசு #தைப்பூசம்2020 #பக்தர்களுக்குவிதிமுறைகள்