வூஹான் கிருமி தொடர்பில் மூன்று சம்பவங்கள் இதுவரை உறுதியான நிலையில், நாம் பதற்றப்படத் தேவை இல்லை என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
இதற்குமுன் ‘சார்ஸ்’ நோயால் சிங்கப்பூர் பெரிதும் பாதிக்கப்பட்டநிலையை விட, இப்போது வூஹான் கிருமியைச் சமாளிக்க சிங்கப்பூர் மேலும் தயார் நிலையில் உள்ளதாக திரு லீ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளியல் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகர் சென்றிருந்த பிரதமர், நேற்று முன்தினம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
நாட்டின் முதல் சம்பவம் உறுதி செய்யப்படுவதற்கு சற்று முன்பாகத்தான் திரு லீ இதனைச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே பலர் வந்து போகும் பட்சத்தில் நாட்டில் வூஹான் கிருமி ஊடுருவல் நடப்பது நிச்சயம். உலகின் மற்ற நாடுகளுக்கும் சிங்கப்பூருக்கும் இடையேகூட எப்படியோ அந்த ஊடுருவல் நடக்கலாம்,” என்றார் பிரதமர்.
புதிதாக முளைத்திருக்கும் வூஹான் கிருமி, கருத்தரங்கின்போது செய்தியாளர்களிடம் பரவலாகப் பேசப்பட்ட ஒரு விவகாரமானது.
2003ல் சார்ஸ் கிருமித் தொற்று பரவிப் பல நாட்டு பொருளியல்கள் பாதிப்படைந்தது போலவே தற்போதை வூஹான் கிருமித் தொற்றால் பாதிப்பு ஏற்படும் என்று கருத்தரங்கில் கலந்துகொண்ட பல வர்த்தகத் தலைவர்கள் தெரிவித்ததாக ‘சிஎன்பிசி’ செய்தி நிறுவனம் கூறியது.
‘சார்ஸ்’க்குப் பிறகு இன்னொரு கிருமித் தொற்று ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூர் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருவதாக பிரதமர் லீ குறிப்பிட்டார்.
சார்ஸ் நோய்த் தொற்றால் 238 பேர் பாதிப்படைந்ததில் 33 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் பிடித்தன.