உலகளாவிய பொருளியல் அபாயங்கள் நிகழவில்லை என்றால்தான் சிங்கப்பூரின் பொருளியல் இந்த ஆண்டில் மீட்சி அடையும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளியல் கருத்தரங்கில் கலந்துகொள்ள டாவோஸ் நகருக்குச் சென்றிருந்த திரு லீ, புளூம்பர்க் செய்தி நிறுவனத்தின் முதன்மை ஆசிரியருக்கு பேட்டி அளித்தார்.
கடந்த ஆண்டில் பொருளியல் மந்தநிலையிலிருந்து சிங்கப்பூர் தப்பித்தது. இந்த ஆண்டின் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு 0.5 விழுக்காட்டிலிருந்து 2.5 விழுக்காடு வரை இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டிருக்கிறது.
இது பொருளியல் நிலவரம் எப்படி இருக்கும் என்று தெளிவாகத் தெரியவில்லை என்பதைக் காட்டுகிறது என்றார் பிரதமர்.
“அனைத்துலக அளவில் பொருளியல் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதைப் பொறுத்தே சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி அமைந்திருக்கும்.
“சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் வர்த்தகப் போர் வெடித்தால், மத்திய கிழக்கில், ஈரானிலோ சிரியாவிலோ பதற்றம் அதிகரித்தால், அது நிச்சயமாக சிங்கப்பூரைப் பாதிக்கும்,” என்று திரு லீ பேட்டியின்போது தெரிவித்தார்.
“மின்னணுவியல் சுழற்சி இப்போது சாதகமாகத் திரும்பியுள்ளது. அது நமது உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு முக்கியமான அம்சம். ஆனால், அது உலகளாவிய பொருளியல், குறிப்பாக அமெரிக்காவைப் பொறுத்திருக்கிறது.
“டாவோஸ் உலகப் பொருளியல் கருத்தரங்கில், அமெரிக்காவின் பொருளியல் மிகப் பிரமாதமாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது, பலர் எதிர்பார்த்ததைவிட அமெரிக்காவின் பொருளியல் மேம்பட்டுள்ளது எனத் தெரிகிறது.
“ஆனால், அந்தப் பொருளியலின் எந்த அம்சத்தில் பின்னடைவுகள் ஏற்படும் என்பது இப்போது தெளிவாக இல்லாததால், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் சிங்கப்பூரின் பொருளியல் நிலைமை எந்த திசையை நோக்கிச் செல்லும் என்று இப்போதைக்கு நம்மால் சொல்ல இயலாது,” என்றும் பிரதமர் விளக்கினார்.
“உலகின் பெரிய பொருளியல்களை சிங்கப்பூர் சார்ந்திருப்பதால் அங்கு நிகழும் திருப்பங்களின் தாக்கம் நம்மையும் பாதிக்கக்கூடும்.
“ஆனால், தொடர் விநியோக நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை மாற்றி அமைத்துக்கொண்டிருப்பதால் பொதுவாக தென்கிழக்காசிய நாடுகள் அதனால் பயனடைந்துள்ளன,” என்றும் திரு லீ விவரித்தார்.