வூஹான் ‘கொரோனா’ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நான்காவது நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஏழு ஹோட்டல் ஊழியர்கள் நேற்று பணிக்கு வர வேண்டாம் என வில்லேஜ் ஹோட்டல் செந்தோசா அவர்களுக்கு அறிவுறுத்தியது.
மருத்துவமனையில் தங்களை உடனடியாக பரிசோதித்துக்கொள்ளுமாறு அந்த ஹோட்டல் அவர்களைக் கேட்டுக்கொண்டது.
சீனாவின் வூஹான் நகரைச் சேர்ந்த 36 வயது ஆடவர், இம்மாதம் 22ஆம் தேதி அவரது குடும்பத்தினருடன் சிங்கப்பூர் வந்தார்.
அதே நாளன்று செந்தோசா தீவில் உள்ள வில்லேஜ் ஹோட்டலில் அவர்கள் தங்கினர்.
அந்த ஆடவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் உறுதிப்படுத்தப்பட்டது. அதையடுத்து, சுகாதார அமைச்சு இதனை அந்த ஹோட்டலிடம் தெரியப்படுத்தியது.
“அந்த ஆடவரும் அவருடன் இருந்த ஐந்து பேரும் கடந்த வெள்ளிக்கிழமை ஹோட்டலைவிட்டு வெளியேறினர். அவர்கள் தங்கியிருந்த அதே அறைகளில் பிறகு மற்றவர்கள் தங்கினர்.
“சுகாதார அமைச்சிடமிருந்து தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த அறைகளில் தங்கியிருந்தவர்கள் உடனடியாக மற்ற அறைகளுக்கு மாற்றிவிடப்பட்டு அங்கு தனிமைப்படுத்தப்பட்டனர்,” என்று வில்லேஜ் ஹோட்டல் செந்தோசாவின் நிர்வாகி ஆல்பர்ட் ஒகாசியோ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் நேற்று கூறினார்.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த சீன ஆடவரும் அவருடன் இருந்த ஐவரும் தங்கியிருந்த மூன்று ஹோட்டல் அறைகளும் மூடப்பட்டுள்ளன.
அவருடன் இருந்த அந்த ஐவரும் இப்போது எங்கு உள்ளனர் என்பது சரியாக தெரியவில்லை.
இந்நிலையில், அந்த ஹோட்டலில் உள்ள அறைகளைவிட்டு முன்கூட்டியே வெளியேற விரும்புபவர்களுக்கு அவர்கள் செலுத்திய பணம் திருப்பித் தரப்படும் என்று திரு ஒகாசியோ கூறினார்.
வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
“ஹோட்டல் பணியாளர்களுக்கும் இங்கு தங்க வரும் வாடிக்கையாளர்களுக்கும் முகக்கவசங்கள், கிருமி நாசினிகள் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு உதவுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன,” என்றார் அவர்.