வூஹான் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூரில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக இணையத்தில் பரவிய வதந்திகளை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.
வைரஸ் தொற்று தொடர்பில் இங்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதை அமைச்சு உறுதிப்படுத்தியது.
இணையத்தில் வதந்திகள் பரவுவது குறித்து தனக்குத் தெரிய வந்துள்ளதாக நேற்று முன்தினம் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட அமைச்சு, பொய்யான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.
“கொரோனா வைரஸ் தொற்றால் சிங்கப்பூரில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக வதந்திகள் பரவுவது சுகாதார அமைச்சின் கவனத்திற்கு வந்துள்ளது.
“இதுவரை சந்தேக அல்லது உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களில் இங்கு மரணம் எதுவும் ஏற்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்,” என்று அமைச்சு கூறியது.
வைரஸ் தொற்று தொடர்பில் ஆக அண்மைய நிலவரம் குறித்து தெரிந்துகொள்ள சுகாதார அமைச்சின் இணையப் பக்கத்திற்குப் பொதுமக்கள் செல்லலாம்.
இந்நிலையில், வைரஸ் தொற்று தொடர்பில் பரவும் வதந்திகளைக் குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையம் மறுத்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழைய 100க்கும் அதிகமான பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவியது தனது கவனத்திற்கு வந்ததாக ஆணையம் நேற்று முன்தினம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
“இணையத்தில் பரவும் வதந்திகள் உண்மையானவை அல்ல. சீனாவின் வூஹான் நகரிலிருந்து இங்கு வரும் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் எதுவும் நிகழவில்லை,” என்று ஆணையம் தெளிவுபடுத்தியது.
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், தாங்கள் பெறும் தகவலை சிங்கப்பூரர்கள் சரிபார்க்க வேண்டும் என்றும் பொய்ச் செய்திகளைப் பரப்பக்கூடாது என்றும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறினார்.
சீனப் புத்தாண்டின் முதல் நாளான நேற்று முன்தினம் சாங்கி விமான நிலையத்தில் ஊழியர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது திரு ஹெங் இதனைத் தெரிவித்தார்.
“வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரத்தைப் பேணிக் காப்பதுடன் நாம் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
“முக்கியமாக, நாம் பெறும் தகவல் உண்மையானதா என்பதை சரிபார்க்க வேண்டும். பொய்த் தகவல் பரவாமல் இருப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும்,” என்றார் அவர்.