சீனப் புத்தாண்டின் முதல் நாளான நேற்று முன்தினம் இரு வேறு இடங்களில் தீச்சம்பவங்கள் நிகழ்ந்தன. இவற்றில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
பிடோக் நார்த் பகுதியில் உள்ள ஷெங் சியோங் பேரங்காடியில் மூண்ட தீயை அணைக்க 10 அவசரகால வாகனங்களையும் 30 தீயணைப்பு வீரர்களையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அனுப்பி வைத்தது.
புளோக் 539ஏ பிடோக் நார்த் ஸ்த்ரீட் 3ல் தீச்சம்பவம் ஒன்று ஏற்பட்டது குறித்து காலை 11.35 மணிக்கு தனக்கு தகவல் அளிக்கப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது அந்தப் பகுதியைச் சுற்றி கரும்புகை சூழ்ந்திருந்தது.
“பேரங்காடியின் இரண்டாவது தளத்தில் உள்ள பெரும்பகுதி மோசமாக சேதமடைந்திருந்ததால் தீயணைப்பு வீரர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டியிருந்தது,” என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
பேரங்காடியின் இரண்டாவது தளத்தில் உள்ள பொருட்கள் தீக்கிரையாகியதாக தெரிவிக்கப்பட்டது.
அதே நாள் காலை வேறொரு தீச்சம்பவம் ஏற்பட்டது. புளோக் 672 ஹவ்காங் அவென்யூ 8ல் உள்ள ஒரு வீட்டில் தீ ஏற்பட்டது குறித்து காலை 11.40 மணியளவில் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வந்தபோது அப்பகுதியைவிட்டு 25 குடியிருப்பாளர்கள் சுயமாக வெளியேறிவிட்டனர்.
வரவேற்பு அறையில் தீ மூண்டதாக தெரிவிக்கப்பட்டது. இவ்விரு தீச்சம்பவங்கள் குறித்து விசாரணை தொடர்கிறது.