சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டை வரவேற்க பலரும் நெருங்கிய உறவுகளோடு கொண்டாட்ட உணர்வில் திளைத்த வேளையில் போக்குவரத்து, சுகாதாரப் பராமரிப்பு, பாதுகாவல் போன்ற முக்கியமான துறைகளில் பணிபுரியும் பலர், விடுமுறை காலத்திலும் பணிபுரிய வேண்டியிருந்தது.
அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக, துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் உள்ளிட்ட தலைவர்கள் ஊழியர்களை நேரடியாக சந்தித்து சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
சீனப் புத்தாண்டின் முதல் நாளான கடந்த சனிக்கிழமை சாங்கி விமான நிலையத்திற்கு சென்ற திரு ஹெங், அங்கு பாதுகாவல் அதிகாரிகள், டாக்சி ஓட்டுநர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட 150க்கும் அதிகமான பணியாளர்களைச் சந்தித்து அவர்களது பணிக்காக நன்றி கூறினார்.
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தலைவர் மேரி லியூ, என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், என்டியுசி மத்திய செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரு ஹெங்குடன் இருந்தனர். ‘அங் பாவ்’ அன்பளிப்புப் பாக்கெட்டுகள், மாண்டரின் ஆரஞ்சுப் பழங்கள், இதர அன்பளிப்புப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அவர்களிடம் திரு ஹெங் வழங்கினார்.
“விமான நிலையம், சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள், சிங்கப்பூர் பாதுகாப்பாக இயங்குவதை உறுதி செய்கின்றனர். அவர்களது கடின உழைப்புக்கு நன்றி கூறுவது முக்கியம்,” என்றார் அவர்.
இதற்கிடையே, டான் டோக் செங் மருத்துவமனைக்குச் சென்ற திரு கான், 40க்கும் அதிகமான ஊழியர்களையும் நோயாளிகளையும் அங்கு சந்தித்தார்.
அவர்களிடம் ‘அங் பாவ்’ பாக்கெட்டுகளையும் மாண்டரின் ஆரஞ்சுப் பழங்களையும் வழங்கிய அவர், சுமார் 50 ஊழியர்களுடன் சேர்ந்து ‘லோ ஹெய்’ என்ற உணவுப் பதார்த்தத்தைச் சாப்பாட்டுக் குச்சிகளால் கிண்டி, கிளறி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார்.
“விடுமுறை காலத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதைவிட்டு மருத்துவமனையில் நோயாளிகளுக்குப் பராமரிப்பு வழங்குவதில் இவர்கள் கடப்பாடு கொண்டுள்ளனர்,” என்றார் திரு கான்.