சிங்கப்பூர் முன்னேற்ற கட்சி ஒரு முக்கியமான கட்சி என்றும் உள்ளூர் அரசியலில் அக்கட்சி நீண்டகாலம் செயல்பட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் டான் செங் போக் கூறியுள்ளார்.
புக்கிட் தீமா ஷாப்பிங் சென்டரின் 14வது தளத்தில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தை நேற்று அதிகாரபூர்வமாக திறந்துவைத்து பேசியபோது அவர் இக்கருத்தை முன்வைத்தார். இந்த நிகழ்வுக்கு அக்கட்சியின் 40க்கும் அதிகமான உறுப்பினர்கள் வருகை புரிந்தனர்.
“இப்போது எங்களுக்கென ஒரு தலைமையகம் உள்ளது. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி நீண்டகாலத்திற்கு செயல்படப் போகிறது என்ற செய்தியை சிங்கப்பூரர்களிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.
“எங்கள் கட்சி நீடிக்கக்கூடிய ஒரு கட்சி என்பதை வலியுறுத்துகிறோம். ஒரே ஒரு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாங்கள் வரவில்லை,” என்று டாக்டர் டான் கூறினார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்கு ஒரு தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள், கூட்டங்கள் போன்றவை அங்கு நடத்தப்படலாம் என்றார் அவர்.
“கட்சித் தலைமையகம் அமைந்துள்ள இடம் ஒரு முக்கிய மையமாகத் திகழும்,” என்று அவர் சொன்னார்.
அரசியல் சூழல் மாறி வரும் வேளையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட கட்சியில் ஒரு வலுவான குழு தேவைப்படுவதை டாக்டர் டான் சுட்டினார்.
குறிப்பாக, அரசியலில் ஈடுபட இளையர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
“அரசியலில் நுழைவதற்கு இளையர்கள் பலர் தயாராக இல்லை என்பதை அறிந்தேன். எதற்கும் அஞ்சாமல் அரசியலில் களமிறங்க நான் இளையர்களை ஊக்குவிக்கிறேன்,” என்றார் அவர்.