சீனப் புத்தாண்டை முன்னிட்டு இஸ்தானாவின் பொது வரவேற்பு நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் 12,000க்கும் அதிகமானோர் வருகை புரிந்தனர். மக்களிடையே வூஹான் ‘கொரோனா’ வைரஸ் குறித்த அச்சம் நிலவினாலும், விழாக்கால உணர்வை அது பாதித்ததாக தெரியவில்லை.
இஸ்தானாவிற்கு வந்திருந்த பலருடன் அதிபர் ஹலிமா யாக்கோப்பும் அவரது கணவர் முகம்மது அப்துல்லா அல்ஹாப்ஷீயும் அளவளாவினார். அதோடு, சிங்க நடனம் உள்ளிட்ட பல்வேறு சீனப் புத்தாண்டு நிகழ்ச்சிகளை அவர்கள் மக்களோடு சேர்ந்து பார்வையிட்டனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருவாட்டி ஹலிமா, சீனப் புத்தாண்டை மக்கள் கொண்டாடும் அதேவேளையில், வைரஸ் தொற்றைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அத்தியாவசியம் என்று வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு இஸ்தானாவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு பொது வரவேற்பு நிகழ்ச்சிக்கு சுமார் 23,000 பேர் வந்திருந்தனர். அந்த எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், இவ்வாண்டின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியளவு குறைவு.
இஸ்தானா ஒருபுறமிருக்க, சீனப் புத்தாண்டை முன்னிட்டு கரையோரப் பூந்தோட்டங்களுக்கும் மக்கள் படையெடுத்தனர். வூஹான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 53 வயது சீனப் பயணி அங்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த கரையோரப் பூந்தோட்ட பேச்சாளர் ஒருவர், “நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம். பூந்தோட்டங்கள் முழுவதும் துப்புரவுப் பணிகள் அதிகரிக்கப்பட்டன. அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் இடங்களிலும் வைரஸ் கிருமிகளை அழிப்பதற்கான பணிகளும் நடப்பில் உள்ளன,” என்று விவரித்தார்.