இளையர்களிடையே மனநலம் தொடர்பான ஆற்றலை மேம்படுத்த இங்குள்ள பள்ளிகளுடன் சேர்ந்து குழு ஒன்று பணியாற்றவுள்ளது. அதோடு, வேலையிடங்களில் மனநலப் பிரச்சினை உடையோருக்கு மேம்பட்ட ஆதரவை வழங்க முதலாளிகளுடன் சேர்ந்து அது பணியாற்றும்.
கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் சிம் ஆனும் தொழில்முனைவர் எட்வர்ட் சியாவும் எஸ்ஜி இளையர் செயல்திட்டக் குழுவிற்குத் தலைமை தாங்குவர்.
மனநலம் தங்களுக்கு ஒரு முக்கியமான விவகாரம் என இளையர்கள் கருத்து தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தக் குழு கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சும் தேசிய இளையர் மன்றமும் இணைந்து 15க்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட 400,000க்கும் அதிகமான இளையர்களை இணையம், சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்புகொண்டுள்ளன. எதிர்கால சிங்கப்பூர் குறித்து அவர்களது தொலைநோக்குப் பார்வையைக் கேட்டறிவது இதன் நோக்கம்.
இத்தகைய நிகழ்வுகளின் மூலம் இளையர்களிடையே மனநலம் குறித்த அக்கறை வெளிப்பட்டுள்ளதாக திருவாட்டி சிம் குறிப்பிட்டார்.
வேலையிடங்களில் மனநலப் பிரச்சினை உடையோருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவது குறித்தும் இளையர்கள் கவலை தெரிவித்துள்ளதை அவர் சுட்டினார்.
இளையர்களிடையே மனநல ஆற்றலை மேம்படுத்துவதன் மூலம் அவர்களது கவலையைக் குறைக்க முடியும் என்றார் அவர்.
பதற்றநிலையைக் குறைப்பது, மற்றவரின் பிரச்சினையைக் கேட்டறிவது உள்ளிட்டவை இத்தகைய ஆற்றல்களில் அடங்கும்.
இங்கு போதுமான ஆலோசகர்கள் இல்லாததால் ஆலோசகர் ஒருவரைப் பார்ப்பதற்கு நீண்டநேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக எஸ்ஜி இளையர் செயல்திட்ட குழுவிடம் இளையர்கள் கருத்து கூறியுள்ளதைத் திரு சியா சுட்டினார்.
“இதன் காரணமாக இளையர்களிடையே தேவையான திறன்களை மேம்படுத்துவது முக்கியமானதாக உள்ளது. இதன் மூலம் விரைவில் உதவி வழங்க முடியும்,” என்றார் அவர்.
வேலையிடத்தில் நிலவும் மனநலப் பிரச்சினைகளைக் கையாள நிறுவனங்களின் மனிதவள துறையில் உள்ள நிபுணர்கள் தற்போது போதிய அளவு ஆற்றல் பெற்றிருக்கவில்லை என்று திரு சியா சொன்னார். அவர்களது ஆற்றலை மேம்படுத்த பங்காளித்துவ முயற்சிகளை ஏற்படுத்தித் தர குழு விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.