சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பிரின்ஸ் ஜார்ஜஸ் பார்க் ரெசடன்சஸ், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஹால் 1, சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் பிரின்செப் ஸ்திரீட் ரெசிடன்சஸ் ஆகியவற்றின் மாணவர்கள் தாங்கள் தங்கும் விடுதிகளிலிருந்து நேற்று வெளியேறினர்.
அவர்கள் தங்கள் விடுதிகள் வூஹான் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தும் இடங்களாக அறிவிக்கப்பட்டிருப்பதால், 24 மணி நேரத்துக்குள்ளாக அவர்கள் வெளியேறி விட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த மூன்று மாணவர்கள் தங்கும் விடுதிகளுடன் தீவு முழுவதிலுமுள்ள ஓய்வுத்தள விடுதிகளும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தும் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பிரின்ஸ் ஜார்ஜஸ் பார்க் ரெசிடன்சஸின் ஏழு புளோக்குகளில் தனிமைப்படுத்தும் நிலையங்கள் என அறிவிப்புகள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்தத் தங்கும் விடுதிகளில் பெரும்பாலும் வெளிநாட்டு மாணவர்களே தங்கியுள்ளனர். அவர்களுக்கு பிரின்ஸ் ஜார்ஜஸ் பார்க் ரெசிடன்சஸின் மற்ற புளோக்குகளில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று அறியப்படுகிறது.
“வெளிநாட்டு மாணவர்களுக்கு இது சொந்த வீடு போன்றது. ஆனால், குறைந்த நேரத்துக்குள் இந்த இடத்தை விட்டு மற்றோர் இடத்துக்கு மாறச் சொன்னார்கள்,” என்று பெயர் குறிப்பிட்ட விரும்பாத சீனாவைச் சேர்ந்த மாணவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
திடீரென தங்கும் விடுதியிலிருந்து வெளியேற விரும்பாத மாணவர்கள் மத்தியில் நிலைமையைப் புரிந்துகொண்டு, தனிமைப்படுத்துதல் நடவடிக்கைக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்த மாணவர்கள் நேற்று பிற்பகல் 3 மணிக்குள்ளாக தங்கும் விடுதிகளிலிருந்து வெளியேறினர்.