வூஹான் கிருமித் தொற்று சிங்கப்பூரையும் பாதித்துள்ளதை அடுத்து, சீனப் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளி திரும்பும் மாணவர்கள் குறித்து அக்கறை எழுந்துள்ளது.
இந்நிலையில், பாலர் பள்ளிகளில் இன்று சுகாதார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.
கடந்த இரண்டு வாரங்களில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட மாணவர்கள், பெற்றோர் ஆகியோரைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வெளிநாட்டுப் பயணம் குறித்த தகவலை இணையம் வழி சமர்ப்பிக்காத பெற்றோர் அதற்கான படிவங்களை இன்று பூர்த்தி செய்தனர்.
புவாங்கோக் கிரசெண்ட் வட்டாரத்தில் உள்ள மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பாலர் பள்ளிக்குச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ இன்று வருகை புரிந்து, அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.
அந்தப் பாலர் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களும் ஊழியர்களும் முகக் கவசம் அணிந்திருந்தனர்.
அவர்கள் அனைவரின் கைகளில் வெப்பமானியும் கிருமி நாசினி போத்தல்களும் இருந்தன.
பாலர் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களின் நலமுடன் இருப்பதற்கு வூஹான் கிருமித் தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிகவும் அவசியம் என்று அமைச்சர் லீ தெரிவித்தார்.
கடந்த இரண்டு வாரங்களில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த மாணவர்கள், பாலர் பள்ளி ஊழியர்கள் அனைவருக்கும் 14 நாள் கட்டாய விடுப்பு அறிவிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். சிங்கப்பூரில் ஏறத்தாழ 1,900 பாலர் பள்ளிகள் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 25,000 ஊழியர்கள் உள்ளன.
அறிவிக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ஏறக்குறைய 600 பாலர் பள்ளி ஊழியர்கள் பாதிக்கப்படுவர் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் 180,000 பாலர் பள்ளி மாணவர்கள் இருப்பதாகவும் அவர்களில் 1,000 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவர் என்றும் நம்பப்படுகிறது.
“வூஹான் கிருமித் தொற்றால் பாலர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளும் உடற்குறையுள்ள முதியோரும் மிக எளிதில் பாதிக்கப்படக்கூடும். அதனால் பாலர் பள்ளிகளிலும் மற்ற சமூக இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கட்டாய விடுப்பில் இருப்போர் வீட்டில் இருக்க வேண்டும் என்று கூட்டமான இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அமைச்சர் லீ தெரிவித்தார்.