வூஹான் கிருமி சிங்கப்பூரில் பரவுவதைத் தடுக்க மேலும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 75 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வூஹான் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நான்கு பேருடன் தொடர்பில் இருந்தனர்.
இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதால் கடந்த இரண்டு வாரங்களில் ஹுபெய்யில் இருந்த ஏறத்தாழ 2,000 பேர் தனிமைப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனிமைப்படுத்தப்படுவோர் சுய தொழில் செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்படும் ஒவ்வொரு நாளுக்கும் $100 வழங்கப்படும்.
வேலை செய்பவர்களாக இருந்தால் அந்தப் பணம் அவர்களது முதலாளிகளுக்குச் சென்றுவிடும். தனிமைப்படுத்தப்படும் நாட்கள் வருடாந்திர விடுப்பின்கீழ் வராது.
கட்டாய விடுப்பில் இருப்பவர்களைவிட தனிமைப்படுத்தப்படுவோருக்கான விதிமுறைகள் மேலும் கடுமையானதாக இருக்கும். தனிமைப்படுத்தப்படுவோர் விதிமுறைகளை மீறி மற்றவர்களுடன் தொடர்பில் இருந்தால் முதல்முறை குற்றம் புரிவோருக்கு $10,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இக்குற்றத்தைத் தொடர்ந்து செய்பவர்களுக்கு மேலும் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.