தொண்டூழியத்தை ஊக்குவிக்கவும் ஓய்வுக்காலத் தேவைகளுக்காக மூத்த குடிமக்களுக்கு உதவவும் வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் திட்டங்கள் இடம்பெறும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
‘ஆர்எஸ்விபி சிங்கப்பூர்’ மூத்த தொண்டூழியர்கள் நிலையத்திற்கு நேற்று வருகைபுரிந்த அமைச்சர், அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார்.
“மூத்த சிங்கப்பூரர்களைப் பொறுத்தமட்டில், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நிறைவான வாழ்க்கையை அவர்கள் வாழச் செய்வதே எங்களின் இலக்கு,” என்றார் குமாரி இந்திராணி.
“தொண்டூழியத்தை ஊக்குவிப்பது தொடர்பான அறிவிப்புகள் வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் நிச்சயம் இடம்பெறும். எத்தகைய வழிகளில் மூத்த குடிமக்களுக்கு உதவ முடியும் என்பதையும் ஆராய்வோம். ஓய்வுபெற்றவர்களுக்கு அவர்களது ஓய்வுக்காலம் தொடர்பான உத்தரவாதத்தையும் நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.
தொண்டூழியம் செய்வதை எளிதாக்கும் வழிகள் குறித்து அரசாங்கம் ஆராயும் என்றும் அவர் சொன்னார்.
அத்துடன், குறிப்பிட்ட காரணங்களுக்காக அல்லது நோக்கங்களுக்காக தொண்டூழியம் செய்ய விரும்புவோரை இணைப்பில் வைத்திருக்க உதவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஓய்வுக்காலம் குறித்த திரு குர்தீப் சிங்கின் கண்ணோட்டத்தைத் தொண்டூழியம் மாற்றியிருக்கிறது.
41 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது பயணப்பைக் கடையை 2013 ஆம் ஆண்டில் விற்ற திரு குர்தீப், அடுத்த ஈராண்டுகளுக்குத் தம் மனைவியுடன் உலகின் பல நாடுகளுக்கும் சென்று வந்தார். அப்போதுதான், எந்த நோக்கமின்றியும் தமது ஓய்வுக்காலத்தைக் கழித்து வருவதை அவர் உணர்ந்தார்.
அதன்பின் தொண்டூழிய வாய்ப்புகள் குறித்து இணையத்தில் தேடிய அவர், ‘ஆர்எஸ்விபி சிங்கப்பூர்’ அமைப்பைக் கண்டறிந்தார். 2015ஆம் ஆண்டில் சாங்கி விமான நிலையத்தில் மூத்த தூதுவராக, அதாவது ‘நடமாடும் தகவல் முகப்பு’ போல அவர் தொண்டூழியம் புரியத் தொடங்கினார்.
“தொடக்கத்தில் பொழுதைப் போக்கவும் அதை நல்ல முறையில் கழிக்கவும் தொண்டூழியத்தில் ஈடுபட்டேன். இப்போது, அது எனக்கு அறிவுக் கற்றல் பயணமாகிவிட்டது. நேரத்தைச் செலவிடுவதற்காக அல்லாமல், உண்மையில் புதிதாக எதையேனும் கற்றுக்கொள்வதற்காக தொண்டூழியம் புரிந்து வருகிறேன்,” என்றார் திரு குர்தீப்.
1998ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘ஆர்எஸ்விபி சிங்கப்பூர்’ அமைப்பில் திரு குர்தீப்பைப் போன்று 2,500க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களின் சேவையால் ஆண்டுக்கு 200,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.
‘எஸ்ஜி கேர்ஸ்’ இயக்கத்தின் ஓர் அங்கமாக, சிங்கப்பூரில் மூத்த குடிமக்களிடம் தொண்டூழியத்தை வளர்ப்பதற்காக ‘ஆர்எஸ்விபி சிங்கப்பூர்’ அமைப்பு கடந்த ஆண்டில் சமூக, கலாசார, இளையர் துறை அமைச்சுடன் கைகோத்தது. 2019 செப்டம்பர் முதல் 2020 செப்டம்பருக்குள் 30,000 மூத்த குடிமக்களைச் சென்றடைய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.