கிளார்க் கீயில் உள்ள கேளிக்கைக்கூடம் ஒன்றில் கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 27) அதிகாலை வேளையில் நிகழ்ந்த கலவரத்தில் காயமடைந்த 31 வயது ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
‘கிளப் இல்லூஷன்’ என்ற அந்த கேளிக்கைக்கூடத்தில் நிழ்ந்த கலவரம் தொடர்பான காணொளி இணையத்தில் வலம் வந்தது.
பலர் கத்துவது, ஒருவரை ஒருவர் தாக்குவது போன்றவை காணொளியில் தெரிந்தன.
இருக்கைகள், கண்ணாடிக் குவளைகள் போன்றவை பறந்தன.
கலவரத்தை ஒடுக்க பாதுகாவலர்கள் முற்பட்டபோது ‘வெளியேறுங்கள்’ என்று மலாய் மொழியில் சத்தம் எழுப்பியதை காணொளியில் கேட்க முடிந்தது.
3A ரிவர் வேலி ரோட்டில் நிகழ்ந்த கலவரம் பற்றி அதிகாலை 3.09 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த ஆடவர், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக போலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சம்பவத்தின் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.
#கலவரம் #கேளிக்கைக்கூடம் #கிளார்க்கீ #தமிழ்முரசு