சிங்கப்பூரர்கள் 92 பேர் சீனாவின் வூஹான் நகரிலிருந்து ஸ்கூட் விமானம் மூலம் இன்று காலை சிங்கப்பூருக்கு அழைத்து வரப்பட்டனர். எனினும், ‘கொரோனா’ கிருமித் தொற்றுக்கான அறிகுறிகள் கொண்ட சிங்கப்பூரர்கள் சிலர் தொடர்ந்து வூஹானில் இருப்பதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் இன்று தெரிவித்தார்.
வூஹான் கிருமித் தொற்றைக் கண்காணிக்கும் அமைச்சர்கள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான அவர், “அதே விமானத்தில் அவர்கள் சிங்கப்பூர் திரும்புவது பாதுகாப்பானது அல்ல,” என்று கூறினார்.
சீனாவில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியிருப்பதைச் சுட்டிய திரு வோங், அவர்களது நலனை உறுதிசெய்ய அங்குள்ள சிங்கப்பூர் தூதரகம் அவர்களைத் தொடர்புகொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நாடு திரும்பிய சிங்கப்பூரர்களுக்குச் சாங்கி விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வெளியுறவு அமைச்சின் அறிக்கை கூறியது.
சிங்கப்பூரர்களை இங்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை வூஹானில் ஒருங்கிணைக்க வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் விமானத்தில் அங்கு பயணம் செய்ததாக அறிக்கை குறிப்பிட்டது.
காய்ச்சல் அல்லது சுவாசப் பிரச்சினைகளுக்கான அறிகுறிகளைக் கொண்டிருப்போர் கூடுதல் பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவர்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை தொலைபேசிவழி அழைத்துப் பேசிய சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், சிங்கப்பூரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்குத் துணைபுரிந்த சீன அரசாங்கம், ஹுபேய் மாநில அரசாங்கம், வூஹான் நகர அரசாங்கம், சிங்கப்பூரில் உள்ள சீனத் தூதரகம் ஆகியவற்றுக்கு சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்ததாக அறிக்கை கூறியது.
காய்ச்சல், அல்லது சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் கூடுதல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படுவர் என்று கூறிய வெளியுறவு அமைச்சு, எஞ்சிய பயணிகளும் அவர்களுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர் என்று சொன்னது.
#வூஹானிலிருந்துநாடுதிரும்பிய92சிங்கப்பூரர் #தமிழ்முரசு