தெம்பனிஸ் மாலில் கூரையிலிருந்து விழுந்து 26 வயது இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
கடந்த சனிக்கிழமை (ஜனவரி 25) அன்று அதிகாலை 1.30 மணியளவில், தெம்பனிஸ் மாலின் நான்காவது மாடியில் உள்ள முற்றத்தின் கூரைக்கு மீதுள்ள நடைபாதையை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, இந்திய நாட்டவரான அவர் கீழே விழுந்தார்.
அலங்காரக் கூரை வழியாக விழுந்து மூன்றாவது மாடியில் விழுந்தார் அவர்.
சாங்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், காயங்கள் காரணமாக உயிரிழந்தார்.
Cleaning Express எனும் நிறுவனத்தால் அந்த ஊழியர் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்ததாக தி நியூ பேப்பருக்கு அளித்த அறிக்கையில் மனிதவள அமைச்சு தெரிவித்தது. தெம்பனிஸ் மாலை கேப்பிட்டாலேண்ட் ரீடெய்ல் மேனேஜ்மென்ட் நிர்வகித்து வருகிறது.
முற்றத்தின் கூரைக்கு மேல் சுத்தப்படுத்தும் பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்குமாறு ஆணையிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மனிதவள அமைச்சின் பேச்சாளர், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
இவ்வாண்டு தொடங்கி ஒரு மாதம் மட்டுமே நிறைவுற்ற நிலையில், சிங்கப்பூரின் வேலையிடங்களில் நிகழ்ந்த நான்காவது மரணம் இது என்று நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒன்பது வேலையிட மரணங்கள் நிகழ்ந்ததையடுத்து, தீவிர கண்காணிப்புப் பணியை முடுக்கிவிட்ட மனிதவள அமைச்சு 400 இடங்களில் முன்னறிவிப்பு ஏதுமில்லாத பார்வையிடல்களுக்குத் திட்டமிட்டது.
கடந்த வாரம் வரை அத்தகைய 230 பார்வையிடல்களை மேற்கொண்ட அதிகாரிகள், குறைந்தது நான்கு இடங்களில் வேலை நிறுத்த ஆணையை வழங்கினர். கண்காணிப்பு இதே வேகத்தில் தொடரும் என்றும் ஊழியர்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய வேலையிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
#தமிழ்முரசு #வெளிநாட்டுஊழியர் #இந்தியஊழியர்மரணம்