சிங்கப்பூர் முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்கள், பலதுறைத் தொழில் கல்தூரிகள், தொழில்நுட்பக் கல்விக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த 853 மாணவர்களும் 115 அலுவலர்களும் 14 நாட்கள் வருகையற்ற விடுப்பில் இருப்பதாக கல்வி அமைச்சு இன்று (ஜனவரி 31) தெரிவித்தது.
கடந்த இரு வாரங்களில் சீனாவுக்குப் பயணமானவர்களுக்கு அத்தகைய விடுப்பு வழங்கப்படும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்தது.
கல்வி அமைச்சு தெரிவித்து உள்ள எண்ணிக்கை வியாழக்கிழமை வரையிலான நிலவரத்தின் அடிப்படையிலானது.
வருகையற்ற விடுப்பில் இருப்போர் கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகள், தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஒரு மாணவரும் ஓர் அலுவலரும் சீனாவில் வூஹான் கொரோனா கிருமி பரவல் தொடங்கிய ஹுபெய் மாகாணத்திற்குச் சென்றவர்கள்.
எஞ்சியவர்கள் சீனாவின் மற்ற பகுதிகளக்குச் சென்றவர்கள்.
பயணத்தின் மூலம் ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகளை சிறந்த முறையில் தணிக்கும் விதமாகவும் அதேநேரம் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் கிடைக்கக்கூடிய வழக்கமான கற்றல் நடவடிக்கைகளையும் இதர நடவடிக்கைகளையும் அவர்கள் தொடரும் நோக்குடனும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சு தெரிவித்து உள்ளது.
ஹுபெய் மாகாணத்திற்குச் சென்றுவந்த பின்னர் தற்போது வருகையற்ற விடுப்பில் இருப்போரின் நிலைமை மோசம் எனக் கருதப்படும் பட்சத்தில் அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான ஆணை வழங்க சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டிக் குறிப்புகளை அமைச்சு சுட்டியது.
சீனாவுக்குச் சென்று திரும்பிய நிலையில் அது பற்றி அறிவிக்காத மாணவர்களைப் பற்றி எழுந்த அக்கறைகளுக்கு அமைச்சு பதில் கூறி உள்ளது.
இது தொடர்பாக தனக்குக் கருத்துரைப்புகள் வந்தததாகவும் அதனைத் தொடர்ந்து விவரங்கள் சோதிக்கப்பட்டதாகவும் கூறிய அமைச்சு, அந்த மாணவர்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் நோய் பரவி தொற்றாத பருவத்தில் சிங்கப்பூர் திரும்பியவர்கள் என்பதால் அவர்களுக்கு வருகையற்ற விடுப்பு வழங்கப்படவில்லை என்று விளக்கியது.
#தமிழ்முரசு #வூஹான்