வூஹான் கொரோனா கிருமித்தொற்றால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் பயணத்துறை, சில்லறை வர்த்தகத் துறை, உணவு, பானத் துறை போன்றவற்றுக்கு சிறப்பான ஆதரவு வழங்குவது பற்றி சிங்கப்பூர் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.
சிங்கப்பூர் சொத்து நிறுவன மேம்பாட்டாளர் சங்கத்தின் வருடாந்திர நிகழ்வு ஒன்றில் பங்கேற்று நேற்று உரை நிகழ்த்திய அமைச்சர், இம்மாதம் சமர்ப்பிக்கப்பட இருக்கும் வரவு-செலவுத் திட்டம் இதுபோன்ற ஆதரவை உள்ளடக்கிய வலுவான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.
“இந்தக் குறுகிய காலத்தில் தாக்கம் ஏற்பட்டிருப்பதை அறிந்துள்ளோம். தாக்கம் இனி அதிகமாகக்கூடும். சிரமத்தை அனுபவிக்கும் பயணத்துறை, சில்லறை வர்த்தகத் துறை, உணவு, பானத்துறை போன்ற குறிப்பிட்ட சில துறைகளுக்கு ஏற்படும் தாக்கம் இனி அதிகமாகலாம்.
“அது நமது ஒட்டுமொத்த பொருளியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
“சீனாவின் பொருளியல், உலகப் பொருளியல் ஆகியவற்றோடு சிங்கப்பூரின் பொருளியலிலும் தாக்கம் தென்படக்கூடும்.
“சார்ஸ் கிருமியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கொரோனா கிருமி அதிகமாகவும் வேகமாகவும் பரவக்கூடியது.
“இதுவரை சார்ஸ் அளவுக்கு சிங்கப்பூர் பாதிப்பைச் சந்திக்கவில்லை என்றபோதிலும் இந்த நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும்.
“சார்ஸ் நோய் பரவிய காலத்தைவிட இப்போது அதிகமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் என்பது நிம்மதி தரக்கூடியது. அரசாங்கத்துடன் தனியார் துறையினரும் சிறந்த முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்,” என்றார் திரு வோங்.