முகக்கவசத்தை எப்போது, எங்கு பெற்றுக்கொள்ளலாம்

முகக்கவசத்தை எப்போது, எங்கு பெற்றுக்கொள்ளலாம்

2 mins read
af3c404b-aee0-4e29-9f4f-8895f8de0bd2
கம்போங் கிளாம் பீச் ரோடு வசிப்போர் குழு நிலையத்தில் முகக்கவசம் வழங்கப்படும் தகவல் அந்த வட்டார மின்தூக்கி முகப்பில் வைக்கப்பட்டு உள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஐந்து மில்லியனுக்கும் அதிகமான முகக்கவசங்களை உள்ளூர் குடும்பங்களுக்கு வழங்கும் பணி இன்று தொடங்குகிறது. சுமார் 200 வசிப்போர் குழுக்கள் நிலையங்களில் அவை விநியோகிக்கப்படும். பீச் ரோட்டில் வசிப்போர் முகக்கவசங்களைப் பெறும் முதல் குடியிருப்பாளர்கள்.

தீவு முழுவதும் உள்ள 89 சமூக நிலையங்களிலும் 654 வசிப்போர் குழு நிலையங்களிலும் முகக்கவசங்களைப் பெற்றுக்கொள்வது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டு வருவதாக வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறினார். ஜாலான் புசாரில் உள்ள மக்கள் கழகத் தலைமையகத்தில் ஆயத்தப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

முகக் கவசங்களை எங்கு சென்று பெற்றுக் கொள்வது என்பது குறித்த சந்தேகம் இருப்பின், https://maskgowhere.sg/ என்ற இணையப்பக்கத்தில், உங்களது அஞ்சல் குறியீட்டு எண்ணை இட்டு தெரிந்துகொள்ளலாம். நீங்கள் முகக் கவசங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டிய வசிப்போர் குழு நிலையம், நேரம், நாள் போன்ற விவரங்களை இதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

எந்தெந்த இடத்தில் எந்தெந்த நேரங்களில் முகக்கவசத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற விவரம் சமூக அறிவிப்புப் பலகைகளிலும், மின்னிலக்கத் திரைகளிலும் நேற்று முதல் இடம்பெற்று வருகின்றன. தொகுதிகளின் சமூக ஊடகப் பக்கங்களிலும் அந்த விவரங்கள் உள்ளன.

முகக்கவசத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பான சந்தேகங்களுக்கு 1800-333-9999 என்ற எண்ணை பொதுமக்கள் அழைக்கலாம். சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 10 மணி வரையிலும் வார நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இந்த எண் சேவையில் இருக்கும். நீண்ட வரிசைகளைத் தவிர்க்கும் நோக்கில் புளோக்குகளின் குழுக்களுக்கு ஏற்ப முகக்கவச விநியோகிப்பு நேரம் மாறுபடும் என்று மக்கள் கழகத்தின் துணைத் தலைவருமான திரு சான் கூறினார்.

"ஒவ்வொரு பிரிவும் தினமும் இரண்டு வசிப்போர் குழு வட்டாரங்களைச் சேர்ந்த 2,500 முதல் 3,000 வீடுகளுக்குச் சேவையாற்றும். அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு குடும்பமும் எப்போது வந்து முகக்கவசத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என நேரம் வரையறுக்கப்படும்.

"வட்டாரத்தின் தேவைகளைப் பொறுத்து முகக்கவசம் வழங்கப்படும் இடத்தையும் முன்னுரிமை யாருக்கு என்பதையும் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அடித்தள ஆலோசகர்கள் முடிவு செய்வர். உச்சக்கட்ட நேரத்தில்கூட முகக்கவசம் வழங்கும் பணியை ஒருசில நிமிடங்களில் முடிக்கத் திட்டமிட்டிருப்பதால் பொதுமக்கள் அவசரம் காட்ட வேண்டிய அவசியம் இராது," என்று விளக்கினார் அமைச்சர் சான்.