தைப்பூசம் போன்ற கூட்டமான நிகழ்வுகளில் பங்கேற்கலாமா? சுகாதார நிபுணர்கள் விளக்கம்

3 mins read

அடுத்த வாரம் தைப்பூசத் திருநாள் இடம்பெற உள்ள நிலையில், வூஹான் கொரோனா கிருமித்தொற்று பற்றிய அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. கொரோனா கிருமித்தொற்று தொடர்பாக தைப்பூச பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தைப்பூச விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்து உள்ளனர். தைப்பூச விழாவின் தொடர்பில் மாற்றங்கள் ஏதும் இருப்பின், சுகாதார அமைச்சின் ஆக அண்மைய ஆலோசனைக்கு இணங்க அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இவ்வேளையில், தைப்பூச விழா போன்ற கூட்டம் அதிகம் சேரும் நிகழ்வுகளில் பங்கேற்பதன் தொடர்பிலான சந்தேகங்கள் குறித்து நிபுணர்களுடன் உரையாடினார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் மூத்த சுகாதாரச் செய்தியாளர்.

வாசகர்களுக்காக அது கேள்வி-பதில் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளது.

கூட்டமான நிகழ்வுகளில் பங்கேற்பது பாதுகாப்பானதா? அவ்வாறு பங்கேற்றால் முகக்கவசம் அணிவது கட்டாயமா?

அன்றாட பணிகளை எப்போதும்போல் மேற்கொள்ளலாம். தற்சமயம் சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்று 'சமூகத்துக்கு உள்ளாக பரவுவது' இல்லை. எனவே, அசாதாரணமான நடவடிக்கைகள் தேவை இல்லை. எனவே, கூட்டமாக மக்கள் கூடும் நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டியதில்லை.

சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டவர்களைச் சுற்றி 2 மீட்டர் சுற்றளவுக்குள் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் தொடர்பிலிருப்போருக்குத்தான் கிருமித் தொற்று ஏற்படும் சாத்தியம் ஏற்படும். எனவே, நீங்கள் மக்கள் அதிகம் கூடும் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லும்போது உங்களுக்கு அருகில் இருப்பவர்கள் முகக் கவசம் அணியாமல் தும்மினாலோ அல்லது இருமினாலோ அவ்விடத்திலிருந்து அகன்று விடுவது நல்லது. கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் கூட்டமான நிகழ்வுகளில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் சாத்தியம் மிகக் குறைவு என்று சொல்லப்படுகிறது.

உடல் நலமில்லாதவர்கள் முகக்கவசம் அணியாமல் தும்மினாலும் இருமினாலும் அவர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது அவசியமா?

கிருமித்தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, அதிகாரிகள் பரிந்துரைக்கக்கூடிய 'சர்ஜிக்கல் மாஸ்க்' எனப்படும் முகக்கவசம் போதுமானதாக இருக்காது. ஆனால், உடல்நலம் குன்றியோர் அத்தகைய முகக்கவசங்களை அணிந்தால் கிருமிகள் மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்க வாய்ப்புகள் உண்டு. உடல் நலக்குறைவு இல்லாத பட்சத்தில் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

"சமூகப் பரவல் மூலம் கிருமித்தொற்று ஏற்படுவது மிகச் சிறிய அளவில் இருந்தாலோ அல்லது இல்லாமல் போனாலோ பொதுப் போக்குவரத்துகளில் முகக்கவசம் அணிவது தேவையற்றது," என்கிறார் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக பொதுச் சுகாதாரப் பள்ளி பேராசிரியர் சியா கீ செங்.

முகம், வாய் மட்டுமின்றி கண்கள் வழியாகக்கூட கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

முகம், கண்கள் போன்றவற்றைத் தொடும் போதும் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால், கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம் என்கிறார் அவர். கைகளை சவர்க்காரம் கொண்டு அடிக்கடி கழுவுவது பயனளிக்கலாம்.

சாப்பிடுவதற்கு முன்பு, கழிவறையைப் பயன்படுத்திய பின்பு மட்டுமின்றி குப்பை, விலங்குகளைத் தொட்டபிறகும் பொது இடங்களில் மற்றவர்கள் பயன்படுத்தியதைத் தொட நேர்ந்தால் அதற்குப் பிறகும் கைகளைக் கழுவுவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

கைகளைக் கிருமிநாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்வதைவிட சவர்க்காரம், தண்ணீர் கொண்டு கழுவுவதே சிறந்தது என்கிறார் பேராசிரியர் செங்.