விவோசிட்டி, பிளாசா சிங்கப்பூரா ஆகிய இடங்களில் உள்ள இரண்டு நகைக்கடைகளில் மொத்தம் $8,758 மதிப்பிலான நகையைத் திருடியதாக 40 வயது பெண், 46 வயது ஆடவர் ஆகியோர் நேற்று முன்தினம் (பிப்ரவரி 3) கைது செய்யப்பட்டனர்.
கடந்த மாதம் 30ஆம் தேதி நிகழ்ந்த திருட்டுகளின் தொடர்பில் போலிசில் புகார் செய்யப்பட்டது.
விசாரணை, கண்காணிப்பு கேமராவில் பதிவான தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவ்விருவரும் கேலாங் லோரோங் 16ல் பிடோக் போலிஸ் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்பில் கைக்காப்பு, கடிகாரம் ஆகிய இரண்டும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
அவர்கள் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.
#தமிழ்முரசு #நகைக்கடை #திருட்டு #விவோசிட்டி