இந்த வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா கிருமித் தொற்றுப் பரவலுக்கு சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற அனைத்துலக அளவிலான வர்த்தகக் கூட்டத்துக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
கடந்த மாத மத்தியில் சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்ற மலேசியருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (பிப்ரவரி 4) மலேசியா தெரிவித்தது.
அந்தக் கூட்டத்தில் சீனாவைச் சேர்ந்தவர்கள் உட்பட, அனைத்துலக நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் பங்கேற்றனர்.
சிங்கப்பூருக்கு வந்தபோது மலேசிய ஆடவருடன் தொடர்பில் இருந்த தென்கொரிய ஆடவருக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பதாக கொரிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் இன்று தெரிவித்தது.
அந்தக் கூட்டத்தின்போது மலேசிய ஆடவருடன் தென்கொரிய ஆடவர்கள் பலர் உணவு உட்கொண்டதாகவும் தென்கொரிய செய்தித்தாள் குறிப்பிட்டது.
அந்தக் கூட்டம் சிங்கப்பூரில் உள்ள கிராண்ட் ஹயட் ஹோட்டலில் நடந்ததாக சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெறுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
கொரிய கிருமித் தொற்று சம்பவம் குறித்த கேள்விகளுக்கு சுகாதார அமைச்சு உடனடியாக பதிலளிக்கவில்லை.
இதற்கிடையே, கிராண்ட் ஹயட் ஹோட்டல், அதன் பொது இடங்களையும் அறைகளையும் கிருமிநாசினிகளைக் கொண்டு சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
அங்கு தங்கியிருந்த வேறு விருந்தினர்களுக்கோ அல்லது அதன் ஊழியர்களுக்கோ கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பதாக இதுவரை தகவல் ஏதும் இல்லை என்றும் அது குறிப்பிட்டது.
#தமிழ்முரசு#தென்கொரியா#சிங்கப்பூர் #கிராண்ட்ஹயட்#கொரோனா