கொரோனா கிருமி காரணமாக விமானப் போக்குவரத்து தொழில்துறையில் ஏற்பட்டு வரும் பாதக விளைவுகள், 2003ல் சார்ஸ் கிருமிகள் தலைவிரித்தாடியபோது ஏற்பட்ட பாதிப்பைவிட மோசமாக இருக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று தெரிவித்தார்.
சீனா இப்போது முன்பைவிட பெரிய சந்தையாக விரிவடைந்து இருக்கிறது என்பதும் சிங்கப்பூருக்கும் இந்த வட்டாரத்திற்கும் சீனாவில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை பெரிதும் கூடி இருக்கிறது என்பதும் அதற்குக் காரணங்கள் என்று நேற்று சாங்கி விமானநிலையத்துக்கு வருகை அளித்தபோது அமைச்சர் குறிப்பிட்டார்.
சாங்கி விமான நிலையத்தில் உள்ள சில்லறை வர்த்தகக் கடைகளில் பணம் செலவிடுவோரைப் பார்க்கையில், மூன்றில் ஒரு பங்கினர் சீனர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைக் கருத்தில்கொண்டு அரசாங்கம், இந்தத் தொழில்துறைக்கு ஆதரவு அளிக்கும் வரவுசெலவுத் திட்டம் ஒன்றை உருவாக்கி வருகிறது. அந்தத் திட்டம் பற்றியும் இதர உதவி நடவடிக்கைகள் குறித்தும் இந்த மாத பிற்பகுதியில் அறிவிப்பு இடம்பெறும்.
சாங்கி விமான நிலையத்தில் சில்லறை வர்த்தகத் துறையில் சுமார் 8,000 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். இவர்களின் நிலை முக்கிய கவலையாக இருக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
நிறுவனங்கள் நல்ல முறையில் செயல்படவில்லை என்றால் ஆட்குறைப்பில் ஈடுபடும். அப்படிப்பட்ட சூழலில் பல குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதை அமைச்சர் சுட்டினார். சார்ஸ் கிருமிகள் தலைவிரித்தாடியபோது சாங்கி விமான நிறுவனத்தின் பயணிகளில் 5 விழுக்காட்டினர் சீன நாட்டினராக இருந்தார்கள். இப்போது அவர்களின் எண்ணிக்கை 11 விழுக்காடாகக் கூடிவிட்டது என்பதை அமைச்சர் குறிப்பிட்டார்.
சீனர்களின் பணம் செலவிடும் ஆற்றலும் அதிகரித்து இருக்கிறது. சாங்கி விமான நிலையத்தில் நடக்கும் சில்லறை வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு சீனர்கள் பொறுப்பு.
இந்த அளவுக்கு இப்போது இழப்பு ஏற்பட்டுவிட்டது என்று கூறிய அமைச்சர், சில்லறை வர்த்தகக் கடைகளுடன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட், சில்க்ஏர் ஆகிய உள்ளூர் விமான நிறுவனங்களும் பாதிக்கப்படுகின்றன என்றார்.
சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் போக்குவரத்து கணிசமாகக் குறைந்து இருக்கிறது. விமானச் சேவைகள் 80 விழுக்காடு வரை குறைந்துள்ளன. 70 விழுக்காடு வரை பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
அமைச்சர் கோ நேற்று விமானநிலையம் சென்றபோது கடைக்காரர்கள் பலரும் தங்கள் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறினார்கள்.
இத்தகைய ஒரு நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு கடைகள், தங்களுடைய ஊழியர்களை மறு
பயிற்சிக்கு அனுப்பி அவர்களின் தேர்ச்சிகள் மேம்பட உதவவேண்டும் என்று அமைச்சர் யோசனை தெரிவித்தார். சுத்தமான பழக்க
வழக்கங்களைக் கடைப்பிடிக்கும்படியும் ஊழியர்களுக்கு அவர் அறிவுரை கூறினார்.