துணைப்பாட நிலையத்தில் தம்மிடம் பாடம் கற்க வந்த தொடக்கப் பள்ளி மாணவியுடன் பழக்கமேற்படுத்திக்கொண்டு, பாலியல் உறவு கொண்ட துணைப்பாட ஆசிரியருக்கு பத்தாண்டுகளும் பத்து மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன், இப்போது 43 வயதாகும் அந்த ஆடவருக்கு பத்துப் பிரம்படிகளும் கிடைக்கும். இந்தத் தீர்ப்பு கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 5) வழங்கப்பட்டது.
2017ல் ஆடவருடன் அறிமுகமானபோது அந்தச் சிறுமிக்கு வயது 11 மட்டுமே.
சந்தேகங்கள் இருப்பின் கைபேசியில் தொடர்புகொள்ள அந்த ஆசிரியர் தம் வகுப்பில் இருந்த மாணவர்களை ஊக்கப்பட்டுத்தினார்.
அதனைத் தொடர்ந்து குறுந்தகவல்கள் அனுப்பியதில் அந்தச் சிறுமிக்கும் ஆசிரியருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது.
2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தன்னுடைய 'பெண் தோழியாக' இருக்க விருப்பமா என்று ஆசிரியர் கேட்டபோது ஒப்புக்கொண்ட அந்தச் சிறுமி அவருடன் கடைத்தொகுதி போன்ற இடங்களுக்குச் சென்றார்.
அதே சமயத்தில் இந்த விஷயம் தம் பெற்றோருக்குத் தெரியாதபடி பார்த்துக்கொண்டார் சிறுமி.
அந்த ஆண்டு பள்ளி இறுதியாண்டுத் தேர்வுக்காகத் (பிஎஸ்எல்இ) தயாராகிக்கொண்டிருந்த சிறுமி, அந்த ஆசிரியர் வீட்டுக்கு வந்து தனிப்பட்ட முறையில் துணைப்பாட வகுப்புகளை நடத்தவும் பெற்றோரிடம் அனுமதி பெற்றார்.
அந்த ஆடவருடன், அவரது வீட்டில், அவரின் இன்னொரு காதலி தங்கியிருந்தது இந்தச் சிறுமிக்குத் தெரியுமா என்பது குறிப்பிடப்படவில்லை.
அதே ஆண்டு மே மாதத்தில் சிறுமிக்கு 12 வயதான பிறகு அந்தச் சிறுமியைப் பள்ளியிலிருந்து அருகில் உள்ள கடைத்தொகுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றார் அந்த ஆடவர்.
உடற்குறையுடையோர் பயன்படுத்தும் கழிவறைக்குள் சென்ற இருவரும் அவர்கள் திட்டமிட்டபடி, நெருக்கமாக இருந்ததாகக் கூறப்பட்டது.
2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மற்றொரு கடைத்தொகுதியில் இருந்த அத்தகைய கழிவறையில் அவ்விருவரும் முதல் முறையாக ‘உறவு’ கொண்டதாகக் கூறப்பட்டது.
ஒரு வாரத்துக்குப் பிறகு அந்தச் சிறுமியைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்ற அந்த ஆடவர் அங்கு சிறுமியுடன் மீண்டும் ‘உறவு’ கொண்டார்.
அந்த மாதத்தின் பிற்பகுதியில் சிறுமி, தம் பெற்றோருடன் விடுமுறைக்காக மலேசியாவுக்குச் சென்றிருந்தபோது, ஆடவருடனான அவரது உறவு பற்றி பெற்றோருக்குத் தெரியவந்தது.
அதனையடுத்து, சிறுமியின் தந்தை சிங்கப்பூர் திரும்பிய பிறகு போலிசில் புகார் அளித்தார்.
அந்தச் சிறுமியின் ஒப்புதலுடன் இருமுறை உறவுகொண்டதை அந்த ஆடவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
#தமிழ்முரசு