கொரொனா கிருமித் தொற்றால் மேலும் இரண்டு சிங்கப்பூரர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக நேற்று (பிப்ரவரி 6) சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
அவர்களில் ஒருவர் சீனாவுக்கு அண்மைய பயணம் மேற்கொள்ளவுமில்லை, இதற்கு முன்பு கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலும் இல்லை என்று கூறப்பட்டது. நேற்று முன் தினம் இரவு 41 வயதான அவருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யாருக்கும் கொரோனா கிருமித்தொற்று இருந்ததா என்பதைக் கண்டறியும் நோக்கில் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
கிருமித் தொற்று இருப்பதாக நேற்று உறுதி செய்யப்பட்ட மற்றொரு நபர் 27 வயதான சிங்கப்பூரர். அவர் சிங்கப்பூர் கிராண்ட் ஹயட் ஹோட்டலில் கடந்த மாதம் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, நேற்றைய நிலவரப்படி, சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்தது. அவர்களில் 11 பேர் சிங்கப்பூரர்கள்.
இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்தது.
நேற்று கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரது உடல் நிலையும் சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
எஞ்சிய 28 பேரில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். 25 பேரின் உடல்நிலை சீராக உள்ளது.
மற்ற இருவரில் ஒருவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மற்றவருக்கு கூடுதல் ஆக்சிஜன் தேவைப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
#தமிழ்முரசு #கொரோனா #சிங்கப்பூர்