கொரோனா கிருமித்தொற்று தொடர்பில் சிங்கப்பூரைச் சேர்ந்த சமய போதகர் வெளியிட்ட கருத்து கள் குறித்து உள்துறை அமைச்சு விசாரணை மேற்கொண்டுள்ளது.
சீனாவின் சின்ஜியாங் மாநிலத்தில் உள்ள முஸ்லிம் உய்கர்களுக்கு சீனர்கள் இழைத்த கொடுமைக்காக இறைவன் தந்துள்ள தண்டனை, இந்த கொரோனா கிருமி எனப் பொருள்படும் வகையில் திரு அப்துல் ஹலிம் அப்துல் கரிம் சென்ற மாதம் 29ஆம் தேதியன்று ஒரு ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் முஸ்லிம்களைப் போல் சுகாதாரமாக இல்லாத காரணத்தால் சீனர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று மற்றொரு பதிவிலும் திரு அப்துல் ஹலிம் கூறியிருந்தார்.
ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராக வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் அவரது கருத்துகள் முற்றிலும் இனவெறி சார்ந்தவையாக உள்ளதென சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நேற்று தம் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.
“இத்தகைய கருத்துகள் யார் கூறினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதிலும் சமய போதகர் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் ஒருவர் இவ்வாறு கூறுவது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று,” என்றார் அமைச்சர் சண்முகம்.
கொரோனா கிருமியை இறைவன் விதிக்கும் தண்டனை என்று கூறுவதெல்லாம் அறிவற்ற வார்த்தைகள் என்றும் வேறு உதாரணங்களைக் கொண்டு திரு அப்துல் ஹலிமின் சொற்களை வாதம் செய்யலாம் என்றும் திரு சண் முகம் குறிப்பிட்டார்.
இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக சமுதாயம் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரில் வாழும் சீனர்கள் உட்பட அனைத்து சீனர்களுக்கும் எதிராக அமைந்துள்ள அப்துல் ஹலிமின் கருத்துகள் தொடர்பில் உள்துறை அமைச்சை விசாரிக்குமாறு தாம் கூறியதாகவும் திரு சண்முகம் கூறினார்.
இதற்கிடையே தன் கருத்துகள் குறித்து திரு அப்துல் ஹலிம் ஃபேஸ்புக் வழி நேற்று மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
தனது சொற்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்றும் தான் எவ்விதத் தவறான நோக்கத்துடனும் இக்கருத்துகளைக் கூறவில்லை என்றும் நேற்றைய பதிவில் விவரித்திருந்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் ‘முயிஸ்’ அமைப்பும் விசாரணை மேற்கொண்டுள்ளது.