கையிருப்பு போதுமானது, அச்சம் தேவையில்லை

2 mins read
39d5fa4b-c685-4a18-b72d-4804db67a99e
ரிசி போன்ற உணவுப் பொருட்களை தேசிய சேமிப்புத் தொகுப்பில் போதுமான அளவு வைத்திருப்பதாக அவர் கூறினார். படம்: எஸ்டி -

கொரோனா கிருமித்தொற்று நிலைமை கடுமையான உடனேயே பேரங்காடிக் கடைகளில் உள்ள பல்வேறு பொருட்கள் காலியாகின.

"ஆனால், இது தேவையில்லாத ஒன்று. ஏனெனில், தேசிய அளவில் நம்மிடையே போதுமான கையிருப்பு உள்ளதுடன் நாட்டின் விநியோகச் சந்தையும் வலுவாக உள்ளது.

"மேலும், உள்ளூர் உற்பத்தியாளர்களும் தங்களது உற்பத்தியை முடுக்கிவிட்டுள்ளனர்," என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் நேற்றுக் கூறினார்.

ஒவ்வொருவரும் தங்களைப் பற்றியே எண்ணும் இந்தப் போக்கு, சமுதாயத்தில் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையிலுள்ள பிரிவினரிடையே தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் உலக நாடுகளிடையே சிங்கப்பூரைப் பற்றி ஒரு மட்டமான எண்ணம் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா கிருமித்தொற்று தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை 'டோர்ஸ்கோன்' விழிப்புநிலையை சிங்கப்பூர் ஆரஞ்சு நிறத்திற்கு உயர்த்தியது.

இதன் தொடர்பில் நேற்று ஜூரோங் வெஸ்ட் பகுதியில் தொகுதிஉலா சென்ற அமைச்சர் சான், சிங்கப்பூரின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்ய அரசாங்கம் நான்கு வழிமுறைகளை மேற்கொண்டுள்ளதை விளக்கினார்.

இதில் முதலாவதாக, அரிசி போன்ற உணவுப் பொருட்களை தேசிய சேமிப்புத் தொகுப்பில் போதுமான அளவு வைத்திருப்பதாக அவர் கூறினார்.

இரண்டாவதாக, பொருட்களை பல்வேறு சந்தைகளில் வாங்குவது. இதனால், எந்தவொரு விற்பனையாளரும் சிங்கப்பூருக்கு நெருக்கடி கொடுக்க முடியாது.

மூன்றாவதாக, சிங்கப்பூரில் உள்ளூர் உணவு உற்பாத்தியாளர்களும் உள்ளனர்.

இதற்கு ஓர் உதாரணமாக, உள்ளூரில் பல நூடல்ஸ் உற்பத்தியாளர்கள் இருப்பதை அமைச்சர் சான் சுட்டினார்.

இவர்கள் அனைவரும் அண்மைய காலத்தில் தங்கள் உற்பத்தியைப் பெருக்கியுள்ளதையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.

இறுதியாக, இந்தப் பிரச்சினையில் நம்பகமான, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களுடன் இணைந்து அரசு பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.

பிரச்சினையை சிங்கப்பூர் அமைதியாக, ஒரு சமூகமாக ஒன்றிணைந்து அணுகினால், இந்தப் பிரச்சினை தீர்ந்தபின்னும் நம்முடன் தொடர்ந்து வர்த்தக உறவுகளில் ஈடுபட மற்ற நாடுகளுக்கு நம்பிக்கையூட்டும் என அவர் விளக்கினார்.