சிங்கப்பூரில் முக்கிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று தெரிவித்தார்.
இருப்பினும், உணவுப் பாதுகாப்பு குறித்து மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். சிங்கப்பூருக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்கள் பருவநிலை மாற்றம் காரணமாகப் பாதிப்படையக்கூடும் என்றார் அமைச்சர் மசகோஸ்.
சீரற்ற, முன்னுரைக்க முடியாத வானிலை, பயிர் விளைச்சலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தண்ணீர் பற்றாக்குறை ஆகியவை உலகில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாக அவர் சுட்டினார். இயற்கை மற்றும் செயற்கைப் பேரிடர்கள், அதிகரித்து வரும் மக்கட்தொகை ஆகியவையும் உணவு பற்றாக்குறைக்கு வழி விடக்கூடும் என்றார் திரு மசகோஸ். “இதனால்தான் உணவுப் பாதுகாப்பு குறித்து சிங்கப்பூர் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. “இந்நாள் வரை கடைப்பிடித்து வரும் அணுகுமுறைகளையும் நம்பியிருக்க முடியாது,” என்றார் அமைச்சர்.
சிங்கப்பூர் உணவுக் கதை எனும் திட்டத்தின் அறிமுக விழாவில் நேற்று கலந்துகொண்டு இது குறித்து பேசினார் அமைச்சர் மசகோஸ். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பூர் கடைப்பிடிக்கும் உத்திகளை இந்தத் திட்டம் மேற்கோள்காட்டுகிறது.
இந்தத் திட்டத்தின் அறிமுக விழா ஜூரோங் லேக் கார்டன்சில் உள்ள கார்டன்ஹவுசில் நேற்று நடைபெற்றது. துல்லியமான திட்டம், சிறந்த போக்குவரத்துக் கட்டமைப்பு இணைப்பு ஆகியவற்றைக் கொண்டு முன்பு ஏற்பட்ட குறுகிய கால உணவு நெருக்கடிகளை சிங்கப்பூர் வெற்றிகரமாக எதிர்கொண்டது. “இதனால்தான் கடந்த வெள்ளிக்கிழமையன்று உணவுப் பொருட்களைப் பெருமளவில் வாங்கி குவித்து வைக்க சிங்கப்பூரர்கள் சிலர் விரைந்தபோதும் பேரங்காடிகளில் உள்ள அலமாரிகள் காலியாக இருப்பதைக் காட்டும் படங்கள் இணையத்தில் வலம் வந்தபோதும் சிங்கப்பூரில் அனைவருக்கும் தேவையான உணவு இருக்கிறது என்று மிகுந்த நம்பிக்கையுடன் எங்களால் கூற முடிந்தது,” என்றார் அமைச்சர் மசகோஸ்.
கொரோனா கிருமித் தொற்று தொடர்பான எச்சரிக்கைநிலை ஆரஞ்சுக்கு மாறியதும் சிலர் பதற்றம் அடைந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க விரைந்ததை அமைச்சர் சுட்டினார். பருவநிலை மாற்றத்தை மீள்திறனுடன் எதிர்கொள்ள சிங்கப்பூரில் உள்ள 100க்கும் மேற்பட்ட பண்ணைகளுக்கு விவசாய உற்பத்தித்திறன் நிதியிலிருந்து $38 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் விளையும் உணவுப் பொருட்களை வாங்க சிங்கப்பூரர்கள் ஆதரவு அளிக்கலாம் என்று அமைச்சர் மசகோஸ் குறிப்பிட்டார்.