மானபங்கம்: கல்வித்துறை மூத்த நிர்வாகி மீது குற்றச்சாட்டு

1 mins read

அரசுக் கல்வி அமைப்பு ஒன்றின் மூத்த நிர்வாகி மீது மானபங்க குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது. தம்முடன் பணியாற்றிய இரண்டு பெண்களை அவர் தொடர்ந்து பலமுறை மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தைப் பாதுகாக்க அந்த 66 வயது ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை அவர் இந்தக் குற்றங்களைப் புரிந்ததாக நம்பப்படுகிறது.

அந்தப் பெண்களை அவர் ஒன்பது முறை மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆறு முறை வேலையிடத்திலும் மூன்று முறை அண்டை நாடுகளுக்கு வேலை காரணமாகச் சென்றபோதும் அந்த மானபங்க குற்றங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

அந்தக் கல்வி அமைப்பில் அந்த ஆடவர் இன்னும் வேலை செய்கிறாரா அல்லது அதிலிருந்து விலகிவிட்டாரா என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை.