வாகனம் தொடர்பான தீச்சம்பவங்கள் கடந்த ஆண்டு குறைந்திருந்தாலும் ஒவ்வோர் இரண்டு நாட்களுக்கு ஒரு தீச் சம்பவம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நிகழ்ந்த வாகனத் தீச் சம்பவங்களின் எண்ணிக்கை 195 என்றும் இது 2018ஆம் ஆண்டில் நிகழ்ந்த 221 சம்பவங்களை விட 11.8% குறைவு என்றும் கடந்த பத்தாண்டுகளில் கடந்த ஆண்டு விகிதம்தான் ஆகக் குறைவானது என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
சம்பவங்கள் குறைந்ததற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், 2018க்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட வாகனத் தீச் சம்பவம் குறித்த பொதுக் கல்வித் திட்டங்களால் வாகன உரிமையாளர்கள் வாகனத் தீப் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
வாகனங்களின் வகைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பழைய டீசல் டாக்சிகளுக்குப் பதிலாக புதிய பெட்ரோல்-மின்சார வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எரிவாயுவால் இயங்கும் வாகனங்கள் இப்போது அரிதாகிவிட்டன என்றும் விவரிக்கப்பட்டது.
“வாகனங்களில் தீச் சம்பவங்களைத் தவிர்க்க வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை முறையாகப் பராமரித்து, அவற்றின் மின்சார, இயந்திர, எரிபொருள் தொடர்பான பாகங்கள் சரியாக வேலை செய்வதை உறுதிப்பபடுத்த, அவற்றைச் சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும்.
“மேலும் வாகனச் சோதனைகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உங்கள் வாகனத்திலிருந்து திரவம் ஏதேனும் கசிகிறதா என்பதையும் சரி பார்க்கலாம்.
“வாகனங்கள் நகர்ந்துகொண்டிருக்கும்போதுதான் தீச் சம்பவங்கள் நிகழ்கின்றன. அப்படி நிகழும்போது, வாகனத்தைச் சாலை ஓரத்தில் நிறுத்தி, இயந்திரத்தைச் செயலிழக்கச் செய்த பிறகு, வாகனத்தை விட்டு வெளியேறவும்.
“தீ சிறியதாக இருந்தால், தீ அணைப்பானைக் கொண்டு தீயை அணைத்து விடலாம்,” என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆலோசனை கூறுகிறது.
இயந்திரம் அதிக சூடாவதும் மின்சாரக் கோளாறுகளுமே வாகனத் தீக்கு முக்கிய காரணங்கள் என்று கூறிய குடிமைத் தற்காப்புப் படை, தேவைக்கு அதிகமாக வாகனப் பாகங்களில் மாற்றங்களைச் செய்வதும் தீ ஏற்படுவதற்குக் காரணம் என்றும் சுட்டியது.
“திறந்தவெளி சாலையில் செல்லும் வாகனத்தில் தீப் பிடித்தால் அது அதில் உள்ளவர்களுக்கு மட்டும் ஆபத்தாகக்கூடும்.
“ஆனால், அதுவே சுரங்கச் சாலையில் நிகழ்ந்தால் அது அனைத்து வாகனமோட்டிகளுக்கும் ஆபத்தாக முடிந்துவிடும்,” என்றார் போக்குவரத்து நிபுணர் திரு கோபிநாத் மேனன்.
#தமிழ்முரசு #வாகனம் #தீவிபத்து