டெங்கி தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கி தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
171563c5-c9b1-45f5-baa3-00484bcca145
2020 முதல் ஐந்து வாரங்களில் 1,723 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. படம்: எஸ்டி, குவா சீ சியோங் -

கொரோனா கிருமிக்கு எதிரான போராட்டம் ஒரு புறம் இருக்க, மற்றொரு புறத்தில் டெங்கி தொற்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகின்றன. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அதிகம் காணப்படாத 'டென்வி-3' கிருமி வகை தொடர்பான டெங்கி சம்பவங்கள் ஏற்படத் தொடங்கினால், நாட்டில் பெருமளவிலான நோய்ப் பரவல் ஏற்படும் என்றது வாரியம். இதுவரை இங்குள்ள டெங்கி தொற்று சம்பவங்கள் 'டென்வி-1' அல்லது 'டென்வி-2' தொடர்பானவையாக இருந்து வந்துள்ளன. ஆனால் கடந்த மூன்று மாதங்களில் 'டென்வி-3' தொடர்பான தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

பெருமளவிலான நோய்ப் பரவலுக்கு முந்தைய நிலைதான் இந்த 'டென்வி-3' நிலை என்று கூறப்பட்டது.

"சமூகத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ள ஏடிஸ் கொசுக்கள், தற்போது அதிகமாக ஏற்பட்டு வரும் டெங்கிச் சம்பவங்கள், 'டென்வி-3' வகையான சம்பவங்களில் அதிகரிப்பு ஆகியவற்றை ஆராயும்போது, இவ்வாண்டு ஒவ்வொரு வாரமும் டெங்கிச் சம்பவங்கள் தற்போதைய நிலையைவிடக் கூடுதலாக இருக்கும்," என்று வாரியம் அதன் டெங்கி இணையத்தளத்தில் குறிப்பிட்டிருந்தது.

இதன்படி மக்களிடையே இன்னும் கூடுதலானோர் டெங்கியால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதை இது குறிக்கும்.

கடந்த வாரத்தில் 400 புதிய டெங்கி தொற்று சம்பவங்கள் பதிவாகின. அதற்கு முந்தைய வாரத்தில் 371 சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

ஞாயிற்றுக்கிழமைக்கும் இவ்வாரம் திங்கட்கிழமைக்கும் இடையே மட்டும் 63 சம்பவங்கள் பதிவாகிவிட்டன.

சென்ற ஆண்டின் டிசம்பர் மாதத்தின் இடைப்பகுதியிலிருந்து ஒவ்வொரு வாரமும் அதிகரித்துக்கொண்டே வரும் டெங்கிச் சம்பவங்கள், சென்ற மாதம் நடுப்பகுதி யில் 404 என்ற அதிக எண்ணிக்கையில் பதிவாகின.

இவ்வாண்டின் முதல் ஐந்து வாரங்களில் 1,723 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 1,057 சம்பவங்களைக் காட்டிலும் இது 60% அதிகரிப்பு.

ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட டெங்கி சம்பவங்களில் 47 விழுக்காடு 'டென்வி-3' வகை சம்பவங்கள். 39 விழுக்காட்டில் உள்ள 'டென்வி-2' வகை சம்பவங்களைக் காட்டிலும் 'டென்வி-3' வகை சம்பவங்கள் கூடுதலாக உள்ளன.

இவ்வாறு 'டென்வி-3' வகை டெங்கி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருவது, கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்று வாரியத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

சென்ற ஆண்டில் 20 பேர் டெங்கியால் உயிரிழந்தனர். இவ்வாண்டில் இதுவரை டெங்கியால் இறப்பு நேரவில்லை.

தற்போது நாட்டில் டெங்கி சம்பவங்கள் தொடர்பில் 114 குழுமங்கள் உள்ளன. அவற்றில் பெகோனியா டிரைவ் பகுதியில் மட்டும் 166 டெங்கிச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. கங்சா சாலையில் 96 சம்பவங்கள், ஜாலான் கெம்பாங்கான் பகுதியில் 85 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் கொசுக்களின் இனப்பெருக்கத்தை முடக்கவும் டெங்கித் தொற்றைத் தடுக்கவும் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும் என்று வாரியம் அறிவுறுத்தியுள்ளது.