பொதுக் கல்விச் சான்றிதழ் ‘ஏ’ நிலை முடிவுகள் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியிடப்படும். அனைத்து பள்ளி, தனியார் மாணவர்களும் தங்களது தேர்வு முடிவுகளை இணையத்தில் பார்வையிடலாம். கொவிட்-19 தொற்றைத் தொடர்ந்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது. முன்பு தனியார் மாணவர்கள் மட்டுமே இணையத்தில் தேர்வு முடிவுகளைப் பார்க்கும் வசதி இருந்தது.
பிப்ரவரி 21ஆம் தேதி, பிற்பகல் 2.30 மணி முதல் மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் முடிவுகளைப் பெறலாம். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தங்களது பயண விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் பள்ளி செல்லும்முன் உடல் வெப்பநிலை சோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சு கூறியது. மாணவர்கள் சிறு குழுக்களாக தங்களது வகுப்பறைகளில் முடிவுகளைப் பெறுவர். தேர்வு முடிவைப் பெறுவோர் மட்டுமே பள்ளி வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.