சிங்கப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகைக்காக வரும் முஸ்லிம்கள் அனைவரும் அவர்களது சொந்த தொழுகை விரிப்புகளைக் கொண்டு வருமாறும் தொழுகைக்கு வரும் மற்றவர்களுடன் உடனான தொடர்பைக் குறைக்க, அவர்களுடன் கைகொடுப்பதைத் தவிர்க்குமாறும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கேட்டுக்கொண்டுள்ளார்.
தொழுகைக்கு வருபவர்களை கொரோனா கிருமித்தொற்றிலிருந்து பாதுகாக்கும் அதேவேளையில், அவர்களது சமய கடமைகளை நிறைவேற்ற இத்தகைய நடவடிக்கைகள் உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிராங்கூன் சாலையில் உள்ள அங்கூலியா பள்ளிவாசலில் புதுப்பிப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டதையடுத்து இன்று அங்கு வருகை புரிந்த திரு மசகோஸ், செய்தியாளர்களிடம் பேசியபோது மேற்கண்ட கருத்தை முன்வைத்தார்.
கிட்டத்தட்ட ஈராண்டு காலமாக நடைபெற்ற புதுப்பிப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டதையடுத்து, அங்கூலியா பள்ளிவாசல் இன்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் முன்வந்துள்ளதைப் பாராட்டிய திரு மசகோஸ், முறையான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
தொழுகை முடிந்தபின் ஒருவர் மற்றொருவருக்கு கைகொடுப்பது வழக்கம்.
“தற்போதைய சூழலில், நாம் கைகொடுப்பதைத் தவிர்ப்போம். அப்படி நீங்கள் செய்தால், உங்களது கைகளைக் கழுவிவிடுங்கள். அதுவரை கைகளால் முகத்தைத் தொடவேண்டாம்,” என்று திரு மசகோஸ் அறிவுறுத்தினார்.