சிங்கப்பூர் 2003ல் சார்ஸ் மிரட்டலைச் சமாளித்ததைப் போலவே இப்போது கொரோனா கிருமி பரவலையும் முழுமைத் தற்காப்பின் வழி தடுத்துவிட முடியும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்து இருக்கிறார்.
அமைச்சரின் முழுமைத் தற்காப்புத் தினச் செய்தி நேற்று வெளியிடப்பட்டது. கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமியை ஒழிக்க சிங்கப்பூர் இப்போது நடத்தும் போராட்டத்தை அவர் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
முன்பு சார்ஸ் கிருமிகள் ஏற்படுத்திய பாதிப்புகளை அந்தச் செய்தியில் அமைச்சர் நினைவுகூர்ந்தார்.
“கிருமி தொற்றிவிடும் என்று எல்லா இடங்களிலும் பயம் நிலவியதால் அப்போது பயணிகள் பயணத் திட்டங்களை ரத்து செய்துவிட்டனர். மக்கள் வீட்டிலேயே தங்கிவிட்டனர். இவற்றின் விளைவாக வேலைகள் போய்விட்டன. ஆட்குறைப்பு அதிகமாகிவிட்டது.
“சில நாடுகளில் இந்த அச்சம் மக்களிடையே பிளவை ஏற்படுத்திவிட்டது. ஆனால், சிங்கப்பூரில் நாம் முழுமைத் தற்காப்பின் மூலம் திரண்டு, ஐக்கியமாகத் திகழ்ந்து, சார்ஸ் கிருமிகளைச் சமாளித்து முன்பைவிட இன்னும் வலுவான மக்களாக மீண்டுவந்தோம்,” என்று அமைச்சர் குறிப்பிட்டு உள்ளார்.
கொரோனா கிருமிகளைத் துடைத்தொழிப்பதில் முழுமைத் தற்காப்பு ஏற்பாடு களத்தில் குதிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் கூறினார்.
அந்த ஏற்பாட்டின் ஓர் அங்கமான சமூகத் தற்காப்பு நடைமுறையையொட்டி ஒவ்வொருவரும் சுத்தமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து, உடல்நலம் சரியில்லாதவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.
அதேவேளையில், பாதிக்கப்பட்டவர்கள் தனித்து வைக்கப்பட்டவர்களிடம் நாம் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
கிருமிகளால் பாதிக்கக்கூடிய ஆபத்துகளை எல்லாம் சமாளித்து மீண்டு வரும் வகையில் மனோவியல் தற்காப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.
சவர்க்காரம் கொண்டு கைகளைக் கழுவுதல், கைகளால் முகத்தைத் தொடாமல் இருத்தல் போன்ற விவேகமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அன்றாடம் நாம் பின்பற்றவேண்டும்.
சிங்கப்பூரர்கள் போலித்தகவல் போன்ற மின்னிலக்க மிரட்டல்களும் தங்களைப் பாதிக்காமல் காத்துக்கொள்ள வேண்டும்.
முழுமைத் தற்காப்பின் கடைசி தூணான மின்னிலக்கத் தற்காப்பு, குறித்த நேரத்தில் சேர்க்கப்பட்ட ஓர் அம்சமாக இருக்கிறது என்பதை அமைச்சர் தனது செய்தியில் சுட்டினார்.
தவறான தகவல்கள் மூலம் பலவீனமாகி, மனஉறுதியை இழந்து கிருமிகளிடம் தோற்றுவிடக்கூடிய சூழலை ஒருபோதும் அனுமதித்துவிடாமல் சிங்கப்பூரை நாம் பாதுகாக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்திக் கூறினார்.
முழுமைத் தற்காப்பு தினம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின்போது 1942ஆம் ஆண்டில் இதே நாளன்று தான் ஜப்பானிடம் சிங்கப்பூர் சரண் அடைந்தது.