தங்களின் இரவு கேளிக்கை விடுதியில் பணியாற்றிய மூன்று பெண் ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களைத் தவறாகப் பயன்படுத்திய குற்றங்களுக்காக ஓர் இந்தியத் தம்பதிக்கு ஐந்து ஆண்டுகள், ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மல்கர் சாவ்லாராம் ஆனந்த், 51 - பிரியங்கா பட்டாச்சார்யா ராஜேஷ், 31 என்ற இருவருக்கும் ஆளுக்கு $7,500 அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் இருவருக்கும் எதிராக ஆதாரங்களைத் திரட்டுவது பெரும் சவாலாக இருந்ததாக கூறப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியம் இதுபோன்ற வழக்குகளுக்கு மிக முக்கியம் என்றும் சாட்சியம் அளிக்க அவர்கள் முன்வரவேண்டும் என்றும் ஆள் கடத்தல் தொடர்பான சிங்கப்பூர் அமைப்புகள்நிலை பணிக்குழுவைச் சேர்ந்த திருவாட்டி ஷர்லி லிம் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நடந்ததைக் கூறத் தயக்கம் காட்டுவதோ அதிகமாகப் பாதிக்கப்பட்டதால் யாரையும் நம்பாமல் விலகிக்கொள்வதோ வழக்கை பலவீனமாக்கும் என்றார் திருவாட்டி லிம்.
ஆங்கிலத்தில் பேச சிரமப்பட்ட அந்த பங்ளாதேஷ் ஊழியர்களிடமிருந்து கோர்வையானதொரு சாட்சியத்தைப் பெற சிரமப்பட்ட போதும் இறுதியில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
ஆள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஊழியர்களைக் கடத்தியதற்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள முதல் இருவர் இத்தம்பதியினர். இந்தத் தண்டனை விதிப்பே ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றார் திருவாட்டி லிம்.